இந்தியாவில் கோடைக்கால திருவிழா என அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடராக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக உள்ளூர், வெளிநாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் பரிசுத்தொகை குறைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மொத்த பரிசுத்தொகையை ரூ.25 கோடியாகக் குறைத்துள்ள ஐபிஎல் நிர்வாகம், கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6.25 கோடியும், 3-வது மற்றும் 4-வது இடம்பிடிக்கும் அணிக்கு தலா ரூ.4.37 கோடியும் வழங்கப்பட உள்ளதாக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் கேட்டால் கடந்த ஆண்டில் ஒரு போட்டி நடத்துவதற்குச் சராசரியாக 30 லட்சம் வரை செலவானது. ஆனால் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த திடீர் அதிரடியால் வீரர்கள், அணி உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்த பரிசுத்தொகையாக ரூ.50 கோடி செலவு செய்யப்பட்டது. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.25 கோடியும், 2ஆம் இடம்பெறும் அணிக்கு ரூ.12.5 கோடியும், 3-வது, 4-வது இடம்பெறும் அணிகளுக்கு தலா ரூ.6.25 கோடி வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.