tamilnadu

img

வருங்கால கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள் - அம்பத்தி ராயுடு டிவிட்டர் பதிவு

வருங்கால கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள் என இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு, சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராஃபி, சையத் முஸ்டாக் அலி டிராஃபி ஆகிய போட்டிகளில் ஹைதராபாத் அணியின் தலைவராக இருந்தார்.சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்படாத விரக்தியில் எல்லா போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறப்போவதாக ராயுடு அறிவித்திருந்தார். பின்பு விஜய் ஹசாரே, சையத் முஸ்டாக் அலி டிரோஃபிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளதாகவும், ஊழல்வாதிகள் கிரிக்கெட் சங்கத்தில் நிரம்பியிருந்தால் எப்படி கிரிக்கெட் முன்னேறும் என்றும், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ராயுடுவின் பதிவுக்கு கருத்து தெரிவித்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசாருதின், ராயுடு விரக்தி அடைந்த வீரர் என கூறினார். 

இதற்கு பதிலளித்த ராயுடு, ”நான் கூறுவதை தனிப்பட்ட பிரச்னையாக பார்க்க வேண்டாம், இது அதை விட பெரியது.அணியை சுத்தம் செய்ய உங்களுக்கு கடவுள் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளார்.வருங்கால கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள் என்பதை தான் நான் கூற வருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.