tamilnadu

img

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்தவர் அம்பத்தி ராயுடு. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக விஜய்சங்கரை அணியில் சேர்த்தபோது அதிருப்தி தெரிவித்தார். எனினும், அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார்.

இந்நிலையில், உலக கோப்பை தொடரின்போது ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் இருவரும் காயம் காரணமாக விலகிவிட்டனர். மாற்று வீரர்களை தேர்வு செய்யும்போது ராயுடுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அம்பத்தி ராயுடு மேலும் அதிருப்தி அடைந்தார். 

அம்பத்தி ராயுடு நிராகரிக்கப்பட்டதை ஐஸ்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. அம்பத்தி ராயுடுவை தங்கள் நாட்டுக்காக விளையாடும்படி கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு நிரந்தர குடியுரிமை பெற்றுத் தரவும் முன்வந்தது. 

இந்நிலையில், ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.