tamilnadu

திருப்பெரும்புதூர் அருகே இளைஞர் கொலை

திருபெரும்புதூர்,ஏப்.28-கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சபரிநாதன் (28). இவர் திருப்பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள செல்போன் உதிரிப்பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வந்தார். இவருடன் ஆவடியை சேர்ந்த செல்வம் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று செல்வம், சபரி நாதன் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் செல்வம் அண்மையில் இறந்து விட்டார். இந்நிலையில் சபரிநாதன் வடமங்கலம், கல்குவாரியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த, திருப்பெரும்புதூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மது அருந்தும் போது செல்வத்தை சபரிநாதன் அடித்ததினால் தான் இறந்து விட்டார் என கூறி அவரின் நண்பர்கள் வடமங்கலம் அடுத்தகருமங்கழனி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், சப்பாணி, யுவராஜ், ராஜ்குமார் ஆகியோர் சபரிநாதனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தரமறுத்தால், காவல் துறையில் புகார் செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதற்கு சபரி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் சபரியை வடமங்கலம் கல்குவாரியில் அழைத்து வந்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

;