காஞ்சிபுரம், மார்ச் 19- உத்திரமேரூர் அடுத்த ஆர்.என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா. இவர் பெருநகர் கிராமத்தில் தன ஆயுர்வேத மருத்துவ மனையில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஜாக்சன் கிறிஸ்டோபர் (வயது 3) ஆண்ட்ரியா(வயது 6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த யசோதா தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். குழந்தைகள் மருத்துவமனையின் பின்புறம் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஜாக்சன் கிறிஸ்டோபர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.குழந்தையின் அழுகுரல் கேட்டு யசோதா ஓடி வருவதற்குள் குழந்தை தண்ணீரில் மூழ்கியது. இதை அடுத்து உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பெருநகர காவல் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் குழந்தையை தீவிரமாகத் தேடியதில் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை ஜாக்சனை உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியது.