திருப்பெரும்புதூர், ஜூன் 21- காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் 87 நாட்கள் நடைபெற்று வந்த அஸாகி நிறுவன தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செங்கல்பட்டு இருங்காட்டுக் கோட்டையில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகனங்களுக்குக் கண்ணாடி தயாரிக்கும் இந்த ஆலையில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 28 தொழிலாளர்கள் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து சிஐடியு சார்பில் 87 வது நாளாகத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், இடைநீக்கம் மெமோ என தொழிலாளர்களை மிரட்டுவதை நிறுத்தவேண்டும், ஓராண்டாக துவங்காத சம்பளப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி மாலை 6.30 முதல்இரவு 10.30 வரை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சி.ஐ.டி.யு தலைவர்கள் எஸ். கண்ணன், இ. முத்துக்குமார், க. பகத்சிங்தாஸ் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் ஜோசப், லட்சுமணன், பாலாஜி, தியாகராஜன், ஜெனிட்டன், வேலாயுதம், விஜயகுமார் ஆகியோர் தொழிற்சங்கம் தரப்பில் கலந்து கொண்டனர். நிர்வாகத்தரப்பில் கே.எஸ் ரவிக்குமார், குமார், செந்தில் குமார், மற்றும் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் தொழிலாளர் துணை ஆணையர் விமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆறு தொழிலாளர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள நிர்வாகம் ஒப்புக் கொண்டது, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 28 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகள் மீது தொடர்ந்து பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியரால் அறிவுரை வழங்கப்பட்டது. மேற்படி கோரிக்கைகள் சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். வேலைநிறுத்த நாட்களுக்கு வேலையும் இல்லை ஊதியம் இல்லை என்ற அடிப்படையில் மேற்படி நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என ஒப்புக் கொள்ளப்பட்டது. நிர்வாகத் தரப்பில் வேலைநிறுத்தம் முடிந்து பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் பணிநீக்கம் போன்ற தண்டனையை மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டது, நிறுவனத்தில் தொழில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிப்பதாக இருதரப்பிலும் ஒப்புக் கொண்டனர்.