எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று மாணவர் விடுதியின் மாடியிலிருந்து விழுந்து ஜார்க்கண்டைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு பொறியியல், மருத்துவம் உள்பட அனைத்து வகையான படிப்புகள் மட்டுமின்றி மிகப்பெரிய மருத்துவமனையும் அமைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 3ம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி,நேற்று திடீரென விடுதிக் கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் செளத்ரி என்ற மாணவர், ஈ.சி.ஈ. முதலாமாண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் இன்று காலை, 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அனுஷ் செளத்ரி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.