பேசும் காச்சக்காரம்மன் – 5
70ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோசேப்பியன்ஸ் முதன் முதலாக தீயைக் கண்டு இதெல்லாம் நல்லதுக்கா இல்லை கெட்டதுக்கா என்று பதறியதைப்போல இப்போதைய மனிதனும் உடலில் காய்ச்சல் வந்து கொதிக்கின்ற போது இதெல்லாம் உடலிற்குள் நுழைந்த கிருமியைக் கொல்வதற்காகத்தானே வெப்பம் அதிகரிக்கிறது, பின் எதற்காக மருந்து மாத்திரை ஊசியெல்லாம் போட்டு அதைக் குறைக்க வேண்டும் என்று குழம்பிப் போய் பதறுகிறார்கள். கோவில்களில் அர்த்தநாரீ என்கிற ஆண்-பெண் சரிபாதியாக இருக்கிற சிலைப் பார்த்தவுடன் அடடா! ஆண் பெண் சமத்துவத்தைப் பேணச் சொல்கிற அற்புதமான சிலையல்லவா என்று பூரிப்படையத் தோன்றும். ஆனால் அதேசமயம் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா, வலதுகை கொடுப்பது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பன போன்ற கருத்தாக்கங்களில் மறைந்துள்ள இடது அசுத்தமானது, அமங்கலமானது, தாழ்வானது என்ற தொன்மையின் வழியேதான் ஆணை வலமாகவும் பெண்ணை இடமாகவும் சிலையாக வடித்திருக்கிறார்கள் என்கிற பிற்போக்குத்தனத்தை விளங்கிக் கொண்டால் சமத்துவத்தைப் பற்றி அடுத்து பேசமாட்டீர்கள்.\
அப்படித்தான் காய்ச்சலைப் பற்றி மேலோட்டமாக பார்த்தால் உடலில் வெப்பம் அதிகரிப்பது நல்லதாகவே தோன்றும். ஆனால் குறிப்பிட்ட அளவிற்கு மேலே போகையில் அதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. மூக்கினுள் நுழைந்த தூசியை வெளியே துரத்தத்தான் தும்மல் வருகிறது. அதன் துணைக்கு கூடவே வெள்ளைச் சளி சுரந்து மூக்கை அடைத்துக் கொள்கிறது. அதற்காக தூசியை வெளியேற்றத்தானே சளி சுரக்கிறது என்று மூச்சுத்திணறிக் கொண்டு அமர்ந்திருக்க முடியாது அல்லவா. அதைப் போலத்தான் காய்ச்சல் வந்த குழந்தைக்கு அத்தகைய உடலின் வெப்பநிலை அதிகரிப்பினால் வேறு ஏதேனும் விபரீதம் வந்துவிடாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. காய்ச்சலின்போது உடம்பில் வெப்பம் அதிகரிப்பதால் எத்தகைய சமாச்சாரங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள நம் உடம்பில் சதாகாலமும் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும், அப்படி என்னதான் உடம்பிலுள்ள செல்களெல்லாம் வேலையைச் செய்கின்றன என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் உடலின் தொழிற்பேட்டைக்குள்ளாக சின்னதாக ஒரு அறிவுச் சுற்றுலா. நமது உடலில்தான் தோராயமாக 37.2 இலட்சம் கோடி செல்கள் இருக்கிறது அல்லவா. அந்த ஒவ்வொரு செல்களும் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளாதவாறு கொஞ்சமாக இடைவெளி விட்டு விட்டுத்தான் இருக்கும். நான் சொல்கின்ற இடைவெளி என்பது நுண்ணோக்கியால் கூர்ந்து பார்த்தால் மட்டுமே தெரியக்கூடியது.
நமது உடலில் 60 சதவீதம் நீர்ச் சத்துகளால்தான் ஆனது. அதேபோல ஒவ்வொரு செல்லுக்குள்ளும் 70லிருந்து 85 சதவீதம் வரை நீரால்தான் நிரம்பியிருக்கும். ஒவ்வொரு செல்களுக்கும் இடையேயான பகுதியும்கூட நீரினாலேதான் நிரப்பப்பட்டிருக்கும். இரத்தம், கண்ணீர், எச்சில்கூட ஒருவகை தண்ணீர்தானே. இப்படி உடம்பே தண்ணீர்ச் சத்தினால் நிறைந்து ஒரு தண்ணீர் தொட்டியைப் போலத்தான் இருக்கும். அப்படியென்றால் காய்ச்சல் வந்து உடலின் நீர்ச்சத்து வற்றிப்போனால் நம்முடைய உடல் என்னவாகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மேலும் நாம்தான் காய்ச்சல் வந்தால் சரியாக தண்ணீரை வேறு சமயத்திற்கு குடிக்க மாட்டோம் என்கிறோமே.
நாட்டிலுள்ள மக்களெல்லாம் அவரவர் மொழி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப கூட்டங்கூட்டமாக ஒரே ஊராக ஒத்து வாழ்வதைப்போல செல்களுமே அதற்கென விதிக்கப்பட்ட வேலைகளை செய்கிற ஏனைய செல்களோடு சேர்ந்து கொண்டு உறுப்பாக மாறிவிடுகிறது. ஒரு உறுப்பு என்பதே பல செல்களின் கூட்டமைப்புதானே. அத்தகைய உறுப்புகளின் கூட்டுழைப்பால்தான் இருதயமாக துடிக்கிறது, நுரையீரலாக மூச்சு வாங்குகிறது, கண்களாக பார்க்கிறது, மூளையாக சிந்திக்கிறது. இதனால்தான் காய்ச்சல் வந்து ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் காட்டுத்தீ போல ஏனைய மற்ற உறுப்புகளுமே அடுத்தடுத்து பாதிப்படைகின்றன. இவ்வாறு செல்களெல்லாம் ஒன்றிணைந்து குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு ஒவ்வொரு செல்களுக்குமே தனித்தனியே தீனியைப் போட வேண்டியிருக்கும். நாம் சாப்பிடுகிற மட்டன் பிரியாணி, சுக்கா வறுவலையெல்லாம் அப்படியே எடுத்துக் கொண்டுபோய் செல்கள் தனக்குத் தேவையான எனர்ஜியாக மாற்றிக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு என்று உணவை மசித்து பக்குவமாய் கொடுப்பதைப்போல செல்களுக்கான உணவையும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் என்று உணவுச் செரிமான உறுப்புகளின் வழியே தயார் செய்து கொண்டுபோய்தான் கொடுக்க வேண்டும். இப்படியான நிலையில்தான் அவற்றை எனர்ஜியாக செல்களால் உற்பத்தி செய்து கொள்ள முடிகிறது. ஆஹா, அப்படியானால் காய்ச்சல் வந்த பிள்ளைகள் சரியாகச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களே அவர்களை எப்படி சரிகட்டப் போகிறீர்கள் பெற்றோர்களே.
மாவுச் சத்து நிறைந்த அரிசி சாதம், புரதச் சத்து நிறைந்த பருப்பு குழம்பு, கொழுப்பச் சத்து நிறைந்த பொரியல் இப்படியாகத்தான் சாப்பிட முடியுமே தவிர மேற்கண்ட கச்சாப் பொருட்களை நேரடியாக சாப்பிட முடியாது. மாவுச்சத்திலிருந்து சர்க்கரை மூலக்கூறுகளையும், புரதச்சத்திலிருந்து அமினோ அமிலங்களையும், கொழுப்புச் சத்திலிருந்து கொழுப்பு அமிலங்களையும் பிரித்தெடுத்து உடலே தயாரித்துக் கொள்கிறது. அதேசமயம் 37.2 இலட்சம் கோடி செல்களுக்கும் கூட்டிக் கழித்து இவ்வளவு கை சோறு, இத்தனை கரண்டி குழம்பு, பொரியல் என்று அளந்து நம்மால் சாப்பிடவும் முடியாது அல்லவா. ஆதலால் நாம் அனைத்து சத்துள்ள ஆகாரங்களாகத் தேடிப்பிடித்து சாப்பிட்டால் போதும் மற்ற சமாச்சாரங்களை நம் உடம்பே பார்த்துக் கொள்ளும். நமது உடம்பு ஒருவித சமநிலையில்தான் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் சமநிலையில் எப்போதெல்லாம் துண்டு விழுகிறதோ அதை சரிசெய்வதற்கு மூளையின் கட்டளைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட செல்களெல்லாம் துரிதமாக இயங்கி வேலை செய்கின்றன. இப்படி சரிசெய்கிற காலத்தில்தான் நமக்கு நோய்மை வந்ததைப் போன்ற தோற்றமே ஏற்படுகிறது. உதாரணத்திற்கு கிருமித் தொற்று ஏற்படுகையில் உடல்வெப்பநிலை அதிகரித்து வெப்பச்சமநிலை பாதிக்கப்படுவதும் அதனால் சுணங்கிப்போய் நோய்வாய்ப்பட்டதாக நமக்குத் தோன்றுவதையுமே எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் உடலின் சமநிலை அளவுக்கு மீறி பாதிக்கப்பட்டுவிட்டால் அத்தகைய செல்களோ பழுதடைந்து இறந்துவிடுகின்றன.
இப்படியாக உடலை சமநிலையில் இயங்க வைப்பற்கு அடிப்படையான உணவே நாம் மூச்சிரைக்கும் போது நுரையீரல் வழி உள்நுழைகிற ஆக்ஸிஜன் வாயுதான். இந்த ஆக்ஸிஜன் வாயுவை தனது வலது கையைப் போல் வைத்துக் கொண்டுதான் எல்லா செல்களும் நாம் சாப்பிடுகிற உணவிலிருந்து வருகிற கச்சாப் பொருட்களை எரித்து எனர்ஜியை உற்பத்தி செய்து கொள்கின்றன. நாம் உணவைச் சாப்பிடும்போது அது முதல் அரவை இயந்திரமான வாய் பகுதியில் எச்சிலோடு சேர்ந்து பற்களால் அரைக்கப்படுகின்றன. அங்கு ஒரளவு அரைக்கப்பட்டவுடன் உணவுக்குழாய் வழியே இரைப்பைக்குள்ளாக நுழைந்து அங்கு அமிலத்தால் நையப் புடைக்கப்பட்டு குடலுக்குள் கூல் பகுதியாக தள்ளப்படுகிறது. அங்கேயும் கணையம், குடல் பகுதிகளால் சுரக்கப்படுகிற நொதிகளால் நுண்ணிய துகளாக உடைக்கப்பட்டு அவை குடலின் சுவர்களில் உள்ள இரத்தக் குழாய்களின் வழியே அனைத்து செல்களுக்கும் அனுப்பப்படுகிறது.
-தொடர்ச்சி அடுத்த வாரம்
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com