புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மலையிலுள்ள இயற்கை சூழலை மேம்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்களும், சுற்றுலா பயணிகளும் எதிர்பார்க்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன்மலையில் 173 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி இல்லாததால் வாழ்வாதாரத்தை தேடி பிற மாநிலங்களுக்கு செல்லக் கூடிய நிலை உள்ளது. மேலும் மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கப்படாததால் சுயதொழில் செய்வதற்கோ அல்லது சொந்தத் தேவைகளுக்கு கடன் பெறுவதற்கோ முடியாத நிலையில் உள்ளனர்.
இங்கு பெரியார், கவ்வியம், மேகம், செருக்கலூர் என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் படகு குழாம், வியூ பாயிண்ட், பழமை வாய்ந்த சின்னதிருப்பதி மலைக்கோயில், மூங்கில் குடில்கள், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுற்றிப் பார்க்க ஏற்ற இடங்களாக உள்ளன. படகுத்துறையில் சவாரி செய்ய 10 படகுகளும் உள்ளன. திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் கோடை காலத்தில் அதிகளவில் இங்கு வருவார்கள். ஆனால் இந்த படகுத்துறை போதிய ஆழம், அகலம் இல்லாமல் உள்ளது. எனவே படகுகள் விசாலமாக பயணிக்கும் வகையில் உள்பரப்பை அகலப்படுத்தி, சுற்றிலும் மரங்களை வளர்த்து சுற்றுலா பயணிகள், குழந்தைகள் அமர்வதற்கான கண்கவர் இருக்கைகள் அமைக்க வேண்டும்.
சிறுவர் பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட பலவற்றை நவீனமாக்க வேண்டும். மலையில் கிடைக்கும் பல்வேறு விவசாய விளைபொருட்கள், கனி வகைகளை விற்பனை செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும். பல்வேறு கிராமங்களை மையப்பகுதியான வெள்ளிமலையுடன் இணைக்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கல்வராயன்மலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வி.சாமிநாதன்