tamilnadu

மண் கடத்திய அதிமுகவினர்: தடுக்கச் சென்ற வட்டாட்சியரை கொல்ல முயற்சி

உளுந்தூர்பேட்டை மே 2-விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிமுகவின ரால் தொடர்ந்து நடத்தப்படும் ஏரி மண் கடத்தலை தடுக்கச் சென்ற உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஏ.குரும்பூர் ஏரியில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படு வதாக வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வட்டாட்சியர் வேல்முருகன் தலைமையில் வருவாய்த்துறையினர் அரசு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மண் ஏற்றிக் கொண்டிருந்த அந்த ஊரின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுக பிரமுகர் சிறீதர் மற்றொரு அதிமுக பிரமுகர் வெற்றி வீரன் உள்ளிட்ட சிலரும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சட்டமன்ற உறுப்பினருக்கு நெருக்கமானவரான சிறீதர் வட்டாட்சியரை நோக்கி “எங்கள் வண்டியையே பிடிக்க வந்து விட்டாயா? உன்னை தொலைத்து கட்டுகிறேன் பார்” என்றெல்லாம் கடுமையாக திட்டியுள்ளார். இந்த தாக்குதலை சமாளித்த வட்டாட்சியர் வேல்முருகன் திருட்டு மண் ஏற்றிய டிராக்டர் டிப்பர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள் ளனர். பின்னர், இது தொடர்பாக வருவாய் துறையினருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் விபரம் அறிந்த அதிமுகவினர் ஒரு நாள் முழுவதும் காவல்துறை அதிகாரிகளுடன் பேசி வழக்கு பதியாமல் இழுத்தடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இதனால் மே 1 ஆம் தேதி வருவாய்த்துறையினர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு வழக்குப்பதியச் சொல்லி வற்புறுத்தியுள் ளனர். ஆனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரான இரா.குமரகுருவின் சகோதரர் நமச்சிவாயம் தலையீட்டின் பேரில் தொடர்ந்து மணல் மற்றும் மண் திருடும் முக்கிய குற்றவாளியான சிறீதரை விடுவித்து மற்றொருவரான வெற்றி வீரன் உள்ளிட்ட வேறு சிலர் மீது வழக்குப் பதிவு செய்து வெற்றி வீரனை மட்டும் கைது செய்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் மே 2 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.முன்னதாக வட்டாட்சியர் தாக்கப்பட்ட செய்தியறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், டி.எஸ்.மோகன், நகரச் செயலாளர் கே.தங்கராசு ஆகியோர் வட்டாட்சியரை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர். தமிழகம் முழுவதும் ஆளும் அதிமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் அரசு அதிகாரிகளை தாக்குவதும் கொலைமிரட்டல் விடுப்பதும் அதிகமாகி கொண்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டக் குழு வன்மையாக கண்டித்துள் ளது.