tamilnadu

img

பாஜக எம்எல்ஏ-வை வளைத்து காங்கிரஸ் - ம.ஜ.த. பதிலடி?

பெங்களூரு:
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்களும், மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை உறுப்பினரான நாகேஷ் என்பவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார். ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

மொத்தம் 14 பேர் ஆளும் அரசுக்குஅளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால், தற்போது மஜத - காங்கிரஸ் கூட்டணியின் பலம் 104 ஆககுறைந்துவிட்டது. மாறாக, 105 எம்எல்ஏக்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றாலும், எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததால், குழப்பம் நீடித்து வருகிறது.மறுபுறத்தில், காங்கிரஸ், மஜத அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர். அதாவது, அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும், ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியாகவும் இவ்வாறு செய்துள்ளனர்.

இதனிடையே, சத்தமில்லாமல் பாஜக எம்எல்ஏ-க்களை தங்களுக்கு சாதகமாக வளைக்கும் திட்டத்தையும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். சிறுகுப்பா தொகுதியை சேர்ந்தபாஜக எம்எல்ஏ-வான சோமலிங்கப்பாவின் தொலைபேசி ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைக்கப்பட்டு இருப்பது, பாஜக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமலிங்கப்பா குடும்பத்தினரின் தொலைபேசிகளும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன.