‘19’மும்பையில் தொடங்கிய புரோ கபடியின் 7வது சீசன் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிரடியாக கலக்கி வரும் அந்த இளம் காளைக்கு வயது 19. அவர் அணிந்திருக்கும் ஜெர்சியும் 19. ஆறு வயதிலேயே கபடியின் நுணுக்கங்கள் அத்துபடியானது. முறைப்படி கபடி விளையாடியதால் 12 வயதுக்குள் மாநிலம் முழுவதும் பிரபலமானார். நவீன் குமாரின் கால் பதிக்காத கபடி போட்டியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார். உலகின் மிகப்பெரிய தொடரான புரோ கபடியில் புதுமுக கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் நவீன்குமாரின் துடிப்பும், துள்ளமிக்க ஆட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துவருகிறது.
நூற்றாண்டின் பெருமை...
கடந்த ஆண்டு நடந்த புரோ கபடி லீக் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதைப் பார்த்த தில்லி அணி நிர்வாகம் தேர்வு செய்ததன் மூலம் இந்த நூற்றாண்டில் பிறந்து மிகக்குறைந்த வயதில் புரோ கபடி லீக்கில் கால்பதித்த கபடி வீரர் என்ற பெருமையோடு கபடி உலகில் அறிமுகமாகியிருக்கிறார்.
அன்று விசில் அடித்தேன்...
குத்துச்சண்டை, மல்யுத்தத்திற்கு பிரபலமான அரியானா மாநிலத்தில் அதிலும் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனைகளும் ‘தங்கல்’ திரைப்பட நாயகிகளுமான ‘போகத்’ சகோதரிகளின் பிறந்த கட்டோதி சுல்தான்பூர் கிராமத்தில் தான் இவரும் பிறந்துள்ளார். குடும்பத்தில் நவீன்குமார்தான் மூத்த மகன், இவருக்கு அங்கித் சர்மா, சோனம் கோயத் என சகோதரரும் சகோதரியும் உள்ளனர். அப்பா, அம்மாவுடன் கிராத்தில் வசித்து வரும் அவர் பல்கலைக்கழக இளங்கலை படித்து வருகிறார். புரோ கபடி தொடருக்கு தில்லி அணி ரூ.6.6 லட்சம் கொடுத்து தக்கவைத்துக் கொண்டது. தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் அவரிடம் சிறிது நேரம் உரையாடினோம். எங்கள் ஊரைச்சுற்றி கிராமங்களில் கபடி விளையாடி வந்ததை பார்த்து ரசித்ததால் கபடி மீதான ஆர்வம் அதிகரித்தது. எங்கு கபடி போட்டிகள் நடந்தாலும் அங்கு இருப்பேன். மற்றவர்கள் ஆடுவதைப் பார்த்து விசில் அடிப்பேன். எந்த நேரமும் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக கபடி விளையாடி வருவேன். இதை பார்த்த எனது தாத்தா மேலும் ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்தார். எனது வேகமும், சுறுசுறுப்பும் அவருக்கு ரொம்பவும் பிடித்ததால் முறைப்படி பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, கடந்த கால சிறு, சிறு தவறுகளையும், குறைகளையும் சரி செய்து கொடுத்ததும் தாத்தாதான் என்று பெருமிதம் கொள்கிறார் நவீன்குமார்.
தாரக மந்திரம்...
இந்திய அணியின் கபடி கேப்டன் அஜய் தாக்கூருடன் விளையாட வேண்டும் என்பது அவரது விருப்பமாகும். அது இவ்வளவு சீக்கிரம் கைகூடும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. 31 போட்டிகளில் விளையாடி இருக்கும் நவீன்குமார் 460 முறை ரைடு (தாக்குதல்) சென்று எதிரணி வீரர்களிடம் பிடிபடாமல், பிடியில் சிக்காமல் 273 புள்ளிகளை குவித்திருக்கிறார்.
புரோ கபடி தொடரில் விளையாடிய 7 ஆட்டங்களில் 76 புள்ளிகளை குவித்து கொடுத்துள்ளார். அதிலும் ஒரு போட்டியில் அதிகப்பட்சமாக 14 புள்ளிகளை எடுத்த தனிப்பட்ட முறையில் முத்திரை பதித்துள்ளார். 131 முறை ரைடு சென்று 65 முறை வெற்றிகரமாக்கியுள்ளார். போனஸ் புள்ளியாக 11 வாங்கியுள்ளார். பத்து முறை மட்டுமே எதிர் அணிக்கு புள்ளியை தந்துள்ளார். “டூ ஆர் டை”ரைடில் (தடுப்பாட்டம்) ஆறு புள்ளிகளும் எடுத்திருக்கும் இவர், அனுபவம் வீரர்களும் மூத்த வீரர்களும் விளையாடி வரும் தில்லி அணியில் நிரந்தர ரைடராக மாறி புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் மிக இளம்வயதில் விளையாடியபோது பெரிய அளவுக்கு நெருக்கடி ஏற்படவில்லை.10 வயதிற்கு பிறகு மூத்த வீரர்களுடன் விளையாடியபோது தடுமாற்றம் ஏற்பட்டது. அந்த தவறுகளை திருத்துவதற்கு முறையாக மீண்டும் பயிற்சியை மேற்கொண்டேன். வேகத்தை அதிகரித்தேன், எடையையும் அதிகரித்தேன். ஆற்று நீரில் நின்ற படி வேகமாக நடப்பது, உடலை நகர்த்துவது, காலை தண்ணீருக்குள்ளேயே தூக்குவது போன்ற ஏராளமான பயிற்சிகளை தாத்தா சொல்லிக் கொடுத்தார். அதனால் பயமின்றி விளையாட முடிகிறது என்றும் கூறினார்.
வெற்றியின் ரகசியம்...
அவரது ஆட்ட திறமைக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது. மாவட்டம், மாநிலம், தேசிய அணிகளில் மிக எளிதில் இளம் வயதிலேயே இடம் பிடித்து விட்டார். கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதை பார்த்த புரோ கபடி அணிகளின் பார்வை முழுக்க இவர்மீது திரும்பியது. அதில், தில்லி அணி தேர்வு செய்து தன்பக்கம் இழுத்துக் கொண்டது, வயது குறைவாக இருந்ததால் வாய்ப்புகள் பறிபோனதையும் சுட்டிக்காட்டினார் நவீன்குமார் கோயட். புரோ கபடியின் அறிமுக தொடரிலேயே சீறிப்பாய்ந்து தனது ‘சூப்பர் ரைடு’ மூலம் எதிரணியின் வீரர்களை கதிகலங்க வைத்து புள்ளிகளை குவித்து வெற்றிக்கு துணையாக நிற்கிறார். உள்ளூர், வெளியூர் போட்டிகளில் 7 வயதிலேயே விளையாடி பரிசுகளை குவித்ததும் 11 வயதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் விளையாட துவங்கியதும் இந்த வெற்றிக்கு காரணம் என்கிறார். கபடி விளையாட்டின் இளம் நட்சத்திரமாக ஜொலிக்க துவங்கியிருக்கும் இந்த காளையின் பயணம் தொடர வாழ்த்துவோம்!