tamilnadu

கன்னியாகுமரி முக்கிய செய்திகள்

தொடரும் ரேசன் அரிசி கடத்தல் பின்னணி குறித்து அதிகாரிகள் மவுனம்
நாகர்கோவில், செப்.8- கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரயில்கள், பேருந்துகள், மற்றும் வாகனங்கள் மூலம் கேரள மாநில த்திற்கு ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் வகையில் பறக்கும் படையினரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் காவல் துறையினரும், அடிக்கடி சோதனை நடத்தி கடத்தல் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கும்பல் ரேசன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது . இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஞாயிறன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் கொட்டாரம் அருகே உள்ள மந்தாரம்புதூர் புதுப்பாலம் பகுதியில் வாகன - சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியா குமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்த டெம்போவை காவல் துறையினர் நிறுத்தினர்.  டெம்போவை நிறுத்திய அதன் ஓட்டுநரும் , கிளீனரும் அங்கிருந்து தப்பியோடினர் . இதைத்தொடர்ந்து அந்த டெம்போவில் சோதனை நடத்திய காவல் துறையினர் டெம்போவில் 750 கிலோ ரேஷன் அரிசி 23 மூடைகளில் இருந்ததை கண்டுபிடித்தனர்.  ரேசன் அரிசியுடன் டெம்போவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவற்றை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநர் , கிளீனரை காவல் துறை யினர் தேடி வருகின்றனர். ரேசன் அரிசியை கடத்திய கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதிகாரிகள் மவுனம் கேரளத்துக்கு கடத்தப்படுவதாக கூறி அவ்வப்போது ரயிலிலும் இதர வாகனங்களிலும் ரேசன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், பெரும்பா லான குற்றங்களில் வாகனங்களும் பொருட்களும் மட்டுமே பறிமுதல் செய்யப்படுகின்றன. கடத்தலில் ஈடுபடுவோரும் பின்னணியில் செயல்படுவோரும் அதிகாரிகளின் கண்க ளுக்கு சிக்குவதே இல்லை. இது ஏன் என அப்பாவி பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாவட்ட அதிகாரிகளின் மவுனம் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

21 கேரள வாகனங்கள் பறிமுதல் ரூ.2.22 லட்சம் அபராதம் விதிப்பு
நாகர்கோவில், செப்.8- கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய கட்டணம் செலுத்தா மலும், விதிகளை மீறியும் கேரள சொகுசு பேருந்துகளும், வேன்களும் இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருந்தது.  இதை தொடர்ந்து, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார், செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் களியக்காவிளை, குழித்துறை, ஊரம்பு, கொல்லங்கோடு, கருங்கல் ஆகிய பகுதி களில் சனியன்று விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையான அனுமதிச்சீட்டு இல்லாமலும், சாலைவரி செலுத்தாமலும் கேரள பதிவெண்ணுடன், குமரி மாவட்டத்தில் இயக்கப்பட்ட 4 சொகுசு பேருந்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவற்றிற்கு தலா ரூ.48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் விதிகளை மீறி இயக்கப்பட்ட 3 கேரள பதிவெண் கொண்ட வேன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . அந்த வேன்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அபராத தொகையை வசூலித்தனர்.  மேலும் நித்திரவிளை பகுதியில் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அனுமதியின்றி குமரி பகுதியில் இயக்கப்பட்டு வந்த 5 கேரள ஆட்டோக்கள் எந்தவித தகுதிச்சான்றும் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்டு வந்தது. இதைப்போன்று தமிழகத்தைச் சேர்ந்த 6 ஆட்டோக்களும் எந்தவித சான்றுகளும் இல்லாமல் இயக்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் அந்த வழியாக பயணிகளை ஏற்றிவந்த 3 கேரள வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட 14 வாகனங்களும் நித்திர விளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.  தொடர்ந்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்தார். சனியன்று பறிமுதல் செய்த 21 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
நாகர்கோவில், செப்.8- தக்கலை அருகே ஆற்றில் மாயமான வாலிபர் உடல் ஞாயிறன்று மீட்கப்பட்டது.  தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் - சகிலா தம்பதியரின் மகன் சஜித் (23) . இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். தனது தாய் சகிலாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சஜித் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவர் வெள்ளியன்று சரல்விளை பகுதியில் உள்ள வள்ளியாற்றில் குளிக்கச் சென்றார் . அப்போது சஜித் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்காததால் சனியன்று இரண்டாவது நாளாக அவரை தேடும் பணி நடைபெற்றது.  இந்நிலையில் ஞாயிறன்று காலை தக்கலை அருகே மிளகுபேட்டை பகுதியில் வள்ளியாற்றில் சிலர் குளிக்க சென்ற போது, ஆற்றின் கரையருகே புதரில் ஒரு ஆண் பிணம் கிடந்ததை கண்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி திவ்யா மற்றும் தக்கலை காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.  காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அது நீரில் மூழ்கி மாயமான சஜித் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் சஜித்தின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.