நாகர்கோவில், ஜூன்.29- தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் வயதை காரணம் காட்டி வேலை வழங்க மறுப்பதை கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இதில் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், 55 வயதுக்கு மேலானவர்கள் எனக்கூறி மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பலருக்கு கடந்த பல நாட்களாக வேலை வழங்க மறுத்து வருகிறது. இதனால் அவர்கள் வேலையின்றி அவதிப்பட்டு வருகின்ற னர். மத்திய, மாநில அரசுகள் 100 சதவீதம் வேலை வழங்க வலியுறுத்தி வரும் நிலையில் ஏழை மக்களுக்கு வேலை வழங்க மறுப்பது அரசின் விதிகளை மீறிய செயலாகும். மேலும், கொரோனா கால ஊரடங்கில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட பொருளாதார வசதியின்றி திண்டாடிவரும் சூழ்நிலையில் வயதைக் காரணம் காட்டி வேலை வழங்காமல் இருப்பது மாபெரும் அநீதியாகும். எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் தலையீடு செய்து வேலையின்றி தவித்து வரும் தொழிலாளர்களுக்கு வயதை காரணம் காட்டாமல் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டுமெனவும், மறுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வேலையில்லாக்கால நிவாரணம் மாதந்தோறும் வழங்கிடவும் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.