நாகர்கோவில், ஆக.10- கன்னியாகுமரி மாவட்டம், அண்டுகோட்டில் புருஷோத்தமன் பிள்ளை நினைவு அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை ஷீஜாபாபு (35), விமல் (40) ஆகிய இருவர் நடத்திவந்தனர். இந்நிலையில், இந்த ஆசிரியர்களுக்கு பதிலாக புதிதாக செந்தில் (38) என்ற உடற்கல்வி ஆசிரியரை, பள்ளி நிர்வாகம் நியமித்தது. இதை கண்டித்தும், மாணவிகளுக்கு பெண் உடற் கல்வி ஆசிரியரை நியமிக்க கோரியும், வியாழனன்று பள்ளி மாணவ, மாணவிகள், தங்கள் பெற்றோருடன் வகுப்புகளை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடற்கல்விக்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை, பள்ளி நிர்வாகம் உரிய முறையில் செலவழிப்பதில்லை. இதன்காரணமாக, விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல், தங்கள் விளையாட்டு பாதிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சாலையில் மாணவர்களை போராடதூண்டியது தவறு என காவல் துறையினர் சுட்டி காட்டியதும், மாணவர்களின் பெற்றோர், காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற பள்ளி நிர்வாகத்திடம் பேசுவதாககாவல் துறையினர் கூறியதை அடுத்து, பெற்றோரும், மாணவர்களும் கலைந்து சென்றனர்.