கடலூர், டிச. 10- இந்தியாவிலேயே மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது வெங்காயத்தின் விலையேற்றம். மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.100 முதல் தரத்திற்கேற்ப ரூ.130 வரையில் விற்பனையாகி வருகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.140 முதல் ரூ.180 வரையில் தரத்திற்கேற்ப விற்பனையாகிறது. இந்நிலையில், கடலூர் பான்பரி காய்கறி சந்தையில் ஒரு வியாபாரி 4 கிலோ பெல்லாரி வெங்காயம் ரூ.100க்கு விற்பனை செய்தார். இதனால், மற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வெங்காயத்தை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து வியாபாரி எஸ்.கே.பக்கிரான் கூறுகையில், “பெங்களூருவிலிருந்து சிறிய அளவிலான பெல்லாரி வெங்காயம் அதிகளவில் வரத்து துவங்கியுள்ளது. இதனால், விலையும் குறைவாக கிடைத்ததால் அதனை பொதுமக்களுக்கு ரூ.25-க்கு வழங்கி வருகிறோம். அடுத்த ரகம் ரூ.60க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களாக இந்த வெங்காயம் கிலோ ரூ.130க்கு விற்பனையானது. ஆனால், சாம்பார் வெங்காயத்தின் விலை அதிரடியாக குறையவில்லையென்றாலும் 25 சதவீதம் அளவிற்கு விலை குறைந்துள்ளது. அதாவது, ரூ.180க்கு விற்பனையான வெங்காயம் தற்போது ரூ.140க்கு விற்பனையாகிறது என்றார். இந்த விலை அப்படியே நிலைநிறுத்தப்பட்டு அதன்பின்னர் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.