tamilnadu

img

இசைப் பள்ளியா? பாம்பு பண்ணையா?

கடலூர், ஜூன் 12- தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 17 இசைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. புதுப்பாளை யம் பகுதியில் வாடகைக் கட்டட த்தில் இயங்கி வந்த இப்பள்ளி தற்போது மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை (வாய்ப்பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் முதலிய 7 கலைக ளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழுநேரமாக பயிற்றுவிக்கப்படு கிறது. இப்பள்ளியில் சேர்வதற்கு ஆண்டுக்கு ரூ.152 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயது வரம்பு 13 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். பள்ளியில் சேரும் மாணவருக்கு  அரசு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்குகிறது. மேலும் இலவச பேருந்து பயண அட்டை, அரசு விடுதி உள்ளிட்ட வசதிகளையும் செய்துள்ளது. அரசு வேலைவாய்ப்பினை பெறுவதோடு, தனியாக இசைக்கச்சேரி நடத்துவதோடு, தனித்திறனை வளர்த்துக் கொள்ளும் இப்பள்ளியில் தற்போது ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்கின்றனர். இவ்வாறான இசைப்பள்ளி அமைந்துள்ள இடம் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளபோதிலும் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் அடிக்கடி வகுப்பறைக்குள் நுழைந்து விடுவ தாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  மாவட்ட ஆட்சியரகமும், பத்திரப்பதிவுத்துறை அலுவலகமும் இடம் மாறிய பின்னர் இந்த வளாகம் முற்றிலும் செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது. ஏராளமான கட்டடங்கள் உள்ள நிலையில் இசைப்பள்ளியும், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மட்டுமே செயல்படுகிறது. மற்ற கட்டடங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு ஊழியர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஆள் நடமாட்டம் குறைந்து, இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். கே.திருமலை என்பவர் கூறுகையில்,  இசைப்பள்ளி எதிரில் சிறிய அளவிலான குளம் உள்ளது. இந்த குளம் தூர்ந்துபோய் தற்போது செடி,கொடிகள் அதிகமாக வளர்ந்து பாம்பு உள்ளிட்டவைகளின் தங்குமிடமாக மாறி விட்டது. எனவே, இந்த குளத்தினை தூர்வாரி சுற்றிலும் நடைமேடை அமைத்தால் அது இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக மாறி விடும். இசைப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கும் புதிய உற்சாகம் அடைவதோடு, அவர்கள் விஷ ஜந்துக்களின் பயமில்லாமல் கல்வி கற்க முடியும் என்றார்