சிதம்பரம், மார்ச் 4- தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக கூட்டுறவுத் துறையில் 33 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் உள்ளது. இதில் பணியாற்றும் ஊழிர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள்” என்றார். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை, பி.எப் தொகை, கூட்டுறவு கடன் ஈவுத் தொகை ஆகியவையை ஊழியர்களின் கணக்கில் சேர்க்கவில்லை. இதுபோன்று முறை கேடாக பணத்தை எடுத்து கூட்டுறவுத் துறை நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். கேரளத்தில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தி ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிகத்திலும் அதனை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.