சிதம்பரம்,அக்.23- தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பருவநிலை மாற்றத்தாலும் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்சல்களால் பொதுமக்கள் அவதியடைந்து அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலாக இருக்குமோ? என்ற பயத்தில் தினந்தோறும் 2000-த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு மருத்து மற்றும் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மாத்திரைகள் வேண்டாம் வேண்டும் என கேட்டு குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதனாலும் மற்ற நோயாளிகளை கவனிப்பதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு பாதித்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில்,“ சாதரண நேரங்களில் தினந்தோறும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 1000 முதல் 1500 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வார்கள். தற்போது பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல்களுக்கு ஒரு நாளைக்கு 2500 பேர் வரை வந்து செல்கிறார்கள்” என்றார். தற்போது அரசுடன் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைக்கப்பட்டுள் ளதால் அங்கும் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் இங்கு கூட்டம் சற்று குறைந்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் புறநோயாளிகள் பிரிவு மதியம் 12 மணி புறநோயாளிகள் பார்வை நேரம் முடிந்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களோ சில குழந்தைகள் மாத்திரை சாப்பிடுகிறது. சிலகுழந்தைகளுக்கு சிரப்பு கொடுக்கவேண்டிய சூழல் உள்ளது. எனவே அரசு சிரப்பு தயாரிப்பிலும் லாபநட்ட கணக்கு பார்க்காமல் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை பாட்டீல்களில் அடைத்து சிரப்பாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.