tamilnadu

58 லட்சம் நாற்றுகள் உற்பத்திக்கு இலக்கு: தோட்டக்கலை துறை தகவல்

கடலூர், மே 28-கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி ஆகிய இடங்களில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறி நாற்றுகள், மரக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாற்றுகள் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இ.ராஜாமணி கூறியதாவது:-தோட்டக்கலைத்துறை சார்பில் விருத்தாசலம், நெய்வேலியில் நாற்றுகளை உற்பத்தி செய்யும் பணி ஆண்டு முழுவதும் நடை பெற்று வருகிறது. இதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டில் விருத்தாசலத்தில் மா, கொய்யா, பப்பாளி, பலா, முந்திரி, மிளகாய், கத்திரி, சாமந்தி, மல்லிகை, கனகாம்பரம் ஆகியவை 23.73 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. நெய்வேலியில் உள்ள பண்ணையிலிருந்து 28.96 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.நடப்பாண்டில் விருத்தாசலம் பண்ணையில் மொத்தம் 28.82 லட்சம் நாற்றுகளும், நெய்வேலி பண்ணையில் 29.27 லட்சம் நாற்றுகளும் உற்பத்தி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விருத்தாசலத்தில் 4 லட்சம் முந்திரி கன்றுகள், மிளகாய் நாற்று 14 லட்சம், கத்திரி நாற்று 5 லட்சம், சாமந்தி நாற்று 1 லட்சம், காலிபிளவர் நாற்று 40 ஆயிரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.நெய்வேலி பண்ணையில் முந்திரி கன்றுகள் 7 லட்சமும், கத்திரி நாற்றுகள் 5 லட்சம், மிளகாய் நாற்று 13 லட்சம், சாமந்தி நாற்று 3.20 லட்சம், தக்காளி நாற்று 60 ஆயிரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.இதில், கத்திரி, மிளகாய் போன்ற நாற்றுகள் ஒன்று ரூ.1க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்களது பட்டா உள்ளிட்டவற்றின் நகலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நாற்றுகளை இலவசமாக பெறலாம். இதேப்போன்று, மரப்பயிர்களான மாங்கன்று (பக்க ஒட்டு)- ரூ.60, மென்பக்க ஒட்டு-ரூ.45, பலா-ரூ.40, கொய்யா- ரூ.35, சாமந்தி- ரூ.2.50, மல்லிகை, கனகாம்பரம்- ரூ.10 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நாற்றுக்களை தோட்டக்கலைத்துறையை அணுகி பெற்றுக்கொள்ளலாம். உழவன் செயலியிலும் பதிவு செய்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.