tamilnadu

img

பானிபுயல் கரையை கடந்தது -6 பேர் உயிரிழப்பு

ஒடிசாவில் பானி புயல் இன்று கரையைக் கடந்துள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 


தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. பானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. 

இதன்படி, பானி புயல் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்கிறது என்று ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதிதீவிர புயல் வீசி வரும் நிலையில் ஒடிசாவின் தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஒடிசாவில் பானி புயல் காரணமாக மணிக்கு 240 - 245 கி.மீ வரை சூறாவளி காற்று வீசி வருகிறது. ஒடிசா கடற்கரை ஓரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஒடிசாவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அசுர காற்று வீசி வருவதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயரிழிந்துள்ளனர். புயலின் தாக்கத்தைதொடர்ந்து கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஏராளமான மின்காம்பங்கள் சாய்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் புயலின் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்து உள்ளன. கப்பற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன. 7 போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 6 விமானங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக கப்பற்படை தெரிவிக்கிறது. பெருமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீரின் அளவு 5 அடி வரை உயரலாமென வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் கடந்த முப்பது ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் நான்காவது பெரிய புயல் பானி என்பது குறிப்பிடத்தக்கது.