tamilnadu

img

காவிரி நீரை திறக்க வேண்டிய நிலையில் உள்ளோம் : குமாரசாமி

மாண்டியா, ஜுன் 19- காவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீரைத் திறந்துவிட வேண்டியி ருப்பதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் அணைகளில் தண்ணீர் இல்லாததால் தற்போது அணைகளை திறக்க வாய்ப்பில்லை என கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், மாண்டியாவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்வதாகத் தெரிவித்தார். அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மாநிலம் முழுவதும் ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தொடங்க இருப்பதாகவும் குமாரசாமி கூறினார். இதனால், தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்காக விரைவில் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.