தமிழ்நாட்டில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. தமிழக பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. இப்படி இருந்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஆங்காங்கே பெருகி வரும் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள்தான்.நகர்ப்புறங்களில் மட்டுமல்ல தற்போது கிராமப்புறங்களில் கூட இப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளி நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. அவர்களும் வீடுவீடாகச் சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசு பள்ளிகளில் ஏற்படும் விழிப்புணர்வு போதிய அளவில் மக்களுக்குப் போய் சேரவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பபடாமல் பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் 2009-ன் படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சில பகுதிகளில் குறைவான ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர். வருடத்திற்கு நான்கு சீருடைகள் நோட்டு பேனா, பென்சில், காலணிகள், மதிய உணவு, இலவச பஸ் பாஸ் போன்றவை அரசு இலவசமாக வழங்குகிறது. மேலும் பள்ளியில் நடைபெறும் விளையாட்டு போட்டி மற்றும் ஆண்டு விழாக்கள் போன்ற அரசு பள்ளியின் செயல்பாடுகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் கூடுதல் புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்பவில்லை. இதற்கு காரணம் பள்ளியின் கட்டமைப்பு வசதி சரியில்லை. போதுமான கழிப்பறை வசதியும் இல்லை என்றும் கூறுகின்றனர். அப்படி கழிப்பறை இருந்தால் அங்கு தண்ணீர் வசதி இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குடிநீர் வசதி கூட பல பள்ளிகளில் இல்லை என்றும் கூறுகின்றனர். அரசு வழங்கும் இலவச பொருளான சீருடைகள் மற்றும் காலணிகள் மிகவும் மட்டமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சீருடைக்கு பதிலாக துணி கொடுத்தால் கூட அதை தைத்து உபயோகப்படுத்தலாம். ஆனால் அவர்கள் கொடுக்கம் சீருடைகள் அனைத்தும் பட்டன்கள் பெயர்ந்து, துணியும் கிழிந்து விடுகிறது. மேலும் செருப்பும் அறுந்துவிடுகிறது. பல பள்ளிகளில் உள்ள உள்ளூர் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பணிக்கு செல்வதில்லை என்றும் கூறுகின்றனர். இந்த பகுதிகளில் இதுவரை பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அமல்படுத்தப்படவில்லை என்கின்றனர்.அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். பல பகுதிகளில் உள்ள குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு செய்தால் மட்டுமே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதுடன் அரசுப் பள்ளிகளை மூடாமலும் ஆசிரியர்களுக்கு வேலை போகாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதிய ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படும்.மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முதலில் பள்ளி கட்டமைப்பை சரி செய்ய வேண்டும். பல பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிங்கள் உள்ளன. அதை சரி செய்வதுடன் மாணவ, மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தருவதுடன் தண்ணீர் வசதியையும் உருவாக்கி தரவேண்டும். அப்போதுதான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்வதும், அரசு பள்ளிகள் மூடாமல் இருப்பதும் சாத்தியமாகும்.