கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கன்னியாகுமரி மாவட்டக்குழு உறுப்பினரும்,சிஐடியு மாவட்ட துணைச் செயலாளரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான இருந்து வருபவர் சகாயஆன்றனி. இவர் நேற்று (அக்.7) திருவட்டாறு பகுதி காட்டாத்துறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கட்சிப்பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இரவு சுமார் 8 மணியளவில் வீட்டின் பக்கம் மறைந்திருந்த சமூகவிரோத ரவுடிக்கும்பல் அவரை கொடூரமான முறையில் தாக்கியது. இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் இரவு அனந்தபுரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சகாயஆன்றனி மீது மிகக்கடுமையாக தாக்கிய ரவுடிக்கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தி இன்று மாலையில் கட்சி வட்டாரக்குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.