tamilnadu

img

‘வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை’

பொங்கல் தித்திக்குமா? விவசாயிகள் கவலை

தஞ்சாவூர், ஜன.9- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வாழையை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.  வாழையை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னை மரங்களுக்கு இணையாக வாழைப் பயிர் அதிகம் சேதம் அடைந்தது. காய்ப்பு தரும் நேரங்களில் கஜா புயல் அடித்ததால் அனைத்து வாழை மரங்களும் வேரோடு பெயர்ந்தும், வாழைத்தார்களின் கனம் தாங்காமலும் கீழே விழுந்து முற்றிலுமாக அழிந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நட்டம் அடைந்தனர். கஜா புயலை கடந்து தங்களின் வாழைத் தோப்புகளை சுத்தம் செய்து புதிதாக வாழைக் கட்டை போட்டு விவசாயம் செய்யத் தொடங்கினர். ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமலும் அசலையும் கழிக்க முடியாமலும் தவித்து வந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பருவமழை பெய்தது. இதனால் வாழைத்தார்கள் முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வாழைத்தார்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. 

இதனால் வாழைச் சாகுபடி செய்த விவசாயிகள் முற்றிலும் அழிந்து போகக்கூடிய நிலையில் இருந்தனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களை அறுவடை செய்து, பேராவூரணி பகுதியில் உள்ள ஏலக் கடைகளில் ஏலம் விடுவதற்காக விவசாயிகள் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதற்குரிய உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள். பேராவூரணி, கூப்புளிக்காடு, ஆதனூர், நெல்லடிக்காடு, பாங்கிரான்கொல்லை, வீரியன்கோட்டை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மாவடுகுறிச்சி, கருக்காக்குறிச்சி, செங்கமங்கலம், அம்மையாண்டி, சித்தாதிக்காடு, பைங்கால், பின்னவாசல் போன்ற பகுதிகளில் வாழை மரங்கள் அதிகமாக பயிர் செய்யப்பட்டு பேராவூரணி பகுதிக்கு ஏலத்திற்காக விவசாயிகள் கொண்டு வருகிறார்கள்.  இங்கு ஏலம் விடப்பட்டு சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் தஞ்சை மாவட்டத்தில் பிற பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. 

பண்டிகை காலங்களில் வெளி மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் பேராவூரணி பகுதிக்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். பிற பகுதிகளிலும் விளையும் வாழைத்தார்களை விட இப்பகுதியில் விளையும் வாழைத்தார்கள் மிகவும் சுவையாகவும், இனிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.  இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நாடாகாடு கோவிந்தன் கூறுகையில், “ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் 900 வாழைக் கட்டைகள் போடலாம். அதில் 100 கட்டை கழிவாகி 800 கட்டை தான் வரும். 12 மாதங்கள் காத்திருந்து அதற்கு ஒவ்வொரு முறையும் தண்ணீர் கட்டி பராமரித்து காவல் காத்து அறுவடை செய்யும் வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.  தற்போது பருவமழை முடிவு பெற்று, வருகிற பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார்கள் அதிகப்படியாக வரும் நேரத்தில் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதற்கான உரிய விலையும் கிடைக்கவில்லை. பூவன் தார் ரூ.150 முதல் 200 வரைக்கும், ரஸ்தாலி தார் ரூ.300 முதல் 400 வரைக்கும், கற்பூரவள்ளி ரூ.200 முதல் 300 வரைக்கும் ஏலம் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

தற்போது செலவுக்குக் கூட கட்டுப்படி ஆகவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் பூவன் வாழைத்தார் 400 ரூபாய்க்கும், அதேபோல் ரஸ்தாலி 450 முதல் 600 வரை விற்பனையாக வேண்டும். கற்பூரவள்ளி 400 முதல் 500 வரை விற்பனை ஆகவேண்டும். இந்த விலையில் விற்பனை ஆனால் மட்டுமே வியாபாரிகள் நஷ்டம் அடையாமல் தொடர்ந்து வாழைத்தார் பயிர் செய்ய முடியும். எனவே அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் அளித்து பொதுமக்களும் இந்த பொங்கல் பண்டிகையில் அதிக விலை கொடுத்து வாங்கினால் மட்டுமே வாழை சாகுபடி செய்யும் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு பொங்கல் தித்திப்பாக அமையும் என்றார். 

;