உளுந்தூர்பேட்டை. ஏப்.26- உளுந்தூர்பேட்டை பகுதியில் சமீப காலமாக தொடர்ந்து சமூக விரோதிகளால் திட்டமிட்டு தூண்டப்பட்டு சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்திட உடனடியாக அனைத்து கட்சி, ஜனநாயக அமைப்புகளின் அமைதி கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் யின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அண்மைக் காலமாக உளுந்தூர்பேட்டை பகுதியில் சாதிய தலைவர்கள் சிலரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிறுத்தியும், சில திரைப்படங்களை கொண்டாடுவது என்ற பெயரிலும், இறப்பு நிகழ்ச்சிகளில் மேளம் அடிக்கும்போதும் உழைக்கும் மக்களிடையே தேவையற்ற வெறுப்பையும், பகைமையையும் திட்டமிட்டு உருவாக்கும் முயற்சியில் சாதிய ஆதிக்க, சமூக விரோதிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 12 ஆம் தேதி உளுந்தாண்டார் கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில் வரையப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப் படத்தின் மீது சாணி பூசி அவமதித்த செயலின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி, அனைத்துக்கட்சி சார்பில் தங்களிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக மார்ச் 17ஆம் தேதி செய்தியாளர் ஆதி.சுரேஷை உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரிலேயே கொலை செய்யும் நோக்கத்தோடு சில சமூக விரோதிகள் ஆயுதங்களுடன் துரத்தியதில் அவர் காவல் நிலையத்தில் புகுந்ததால் உயிர் தப்பினார். இது குறித்து புகாரளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்தும் முக்கிய குற்றவாளியை கைது செய்து அன்றே காவல்துறையினர் விடுவித்தனர். பிற குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
மேலும், அன்றைய தினமே ஒரு இறப்பு நிகழ்ச்சியில் மேளம் அடித்ததற்காக தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மீது புகார் அளிக்கப்பட்டபின் பாதிக்கப்பட்டவர்களின் மீதும் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதன்பின் ஏப்ரல் 17 அன்று இரவு செம்மணங்கூர் தலித் பகுதிக்குள் புகுந்து உளுந்தாண்டார்கோவில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் செம்மணங்கூர் தலித் பகுதிக்குள் புகுந்து சாதிய வன்மத்துடன் தகராறு செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதிலும் வழக்குப் பதிவு செய்ததோடு நிறுத்தப்பட்டது. குற்றவாளி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில்தான் ஏப்ரல் 24 அன்று ஆதி.சுரேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக செம்மணங் கூர் தலித் பகுதியைச் சார்ந்தோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இப்படி உளுந்தூர்பேட்டை காவல் துறையினரின் பாரபட்ச மான நடவடிக்கைகளின் காரணமாக இப்பகுதியில் சாதி மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஆதி.சுரேஷ் உள்ளிட்ட செம்மணங்கூர் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உளுந்தூர் பேட்டை பகுதியில் உழைப்பாளி மக்களிடையே வருங்காலத்தில் சமூக பதட்டம் ஏற்படும் நிலையைப் போக்கி அமைதி ஏற்படுத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது கோட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.