ஜெனீவா,மார்ச் 24- கொரோனா வைரஸ் பரவலை தடுத்து சமாளிக்கும் மிகப்பெரும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஜே ரியான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாக இயக்கு நர் மைக்கேல் ஜே ரியான் கூறிய தாவது:
கொரோனா வைரஸ் பரவலை தடுத்து சமாளிக்கும் மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஏனென்றால் சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒழித்த அனுபவம் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதிக்கும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தியா மிகவும் மக்கள் தொகை கொண்ட நாடு. இந்த வைரஸின் தாக்கம் மிக அதிக மற்றும் அடர்த்தியான நாட்டில் அதிகம் இருக்கும் என கருதப்படுகிறது. சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்றுநோய்களை ஒழிப்பதில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்தது. எனவே இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது. இந்தியா போன்ற நாடுகள் முன்பு செய்ததைப் போலவே உலகிற்கும் வழி காட்டியாக இருப்பது முக்கியமானது என்று தெரிவித்தார்.