tamilnadu

img

கணினிவழி தொல்தமிழ் எழுத்துப் பயிற்சியும் கவனத்துக்கு சில கேள்விகளும் - தொகுப்பு: சிநேகா

“தொன்மத்தைச் சொல்லிச் சொல்லி நவீனத்தை அழித்துவிடக் கூடாது” பாடத்திட்டக்குழுவில் ஒருமுறை பேசிய ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் இப்படிக் கூறினாராம். இது எச்சரிக்கை உணர்வு பெற்ற சரியான கருத்துதான்.  நமக்குள்ளே பழங்கதைகள் பேசி முடங்கிவிடக் கூடாது .ஆனால் கடந்துவந்தப் பாதையைத் திரும்பிப் பார்ப்பது முன்னேற்றத்தின் முயற்சியாக இருந்தால் பழங்கதையும் பேசலாம்; பேச வேண்டும்.  இணையம் என்கிற ஒற்றைப்பொறி இன்று மனிதர்களைச் சுருட்டி சுவீகரித்துக் கொண்டுள்ளது. செல்பேசித் திரையைத் தடவித் தேடாதவர்களை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளாதவர்களைக் காண்பது அரிது.

இருப்பினும் மனித உறவுகளை மாசுபடுத்தும் சாதீயமும் மதவாதமும் மேலே விழுந்து மிதிக்கும்போது இவற்றிலிருந்து விடுவிக்க, தொன்மை மரபுகளைத்தான் நாம் தோண்டிக் காட்ட வேண்டியுள்ளது.  இதற்குப் பயன்படுகின்றவை சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை தான். இதற்கும் மேலதிகமாக நமக்கு வரலாற்று அறிவு தருபவை கல்வெட்டுக்களும் செப்பேடுக ளும் ஓலைச்சுவடுகளும்.  இவற்றில் கல்வெட்டுக்கள்தான் வீட்டில்வைத்துப் பாதுகாக்கப் படாமல் சிதறிக் கிடக்கின்றன. இவற்றைத் தேடிக்கண்டடைந்து -  புரிபடாமல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களை ஆய்வுசெய்து - பலவாறான செதுக்கல்களை ஒப்பீடு செய்து - இது இன்ன எழுத்தாகத்தான் இருக்கும் என்று ஊகம் செய்து .... கல்வெட்டுக்கள், ஆய்வு போலவே கடுமையானதுதான். இந்தப் பணியை அரசு நிறுவனங்கள் ஒருபக்கம் செய்து கொண்டிருந்தாலும் மறுபக்கம், தனிநபர்கள், அமைப்புகளின்  முயற்சிகளும் தளராமல் தொடர்கின்றன. 

இந்த வகையில் தமுஎகச அறம் கிளை கல்வெட்டுக்கள் வாசிப்புப் பயிற்சியை நடத்திவருவது எளிய பணியல்ல. பாராட்டு வோம். பழமையைப் புதுமையுடன் இணைத்துச் செயல்படுத்தும் பாங்கோடு ஆதிக்கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட கிரந்த எழுத்துக்கள் ,வட்டெழுத்துக்கள் போன்றவற்றில் இணையவழி பயிற்றுவித்து பின்னர் நேர்முகக் கூடுகை நிகழ்வுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அக்கு ‘ஹீலர் உமர் ஃபரூக் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தொல்லியல் எழுத்துக்கள் வாசிப்பில் தோய்ந்திருக்கும் அழகம்பெருமாள் காக்கும்பெருமாள் ( அ.கா. பெருமாள் ), செந்தீ நடராசன், அனந்து என்கிற அனந்த நாராய ணன் ஆகியோர் பயிற்றுநராகவும் பன்முகக் கருத்தாளர்களாகவும் பங்கேற்றனர்.  “அதிகப்பட்ச நம்பகத்தன்மை கொண்டவை கல்வெட்டுக்கள் .அதன் பிறகு செப்பேடுகள். ஓலைச்சுவடிகளை அதற்கும் பின்னாகத்தான் வைக்கமுடியும்” என்று கூறிய அ.கா.பெருமாள் அதற்கு விளக்கமும் அளித்தார். 

“ஓலைச்சுவடிகள் சிலநூறு ஆண்டுகள்தான் தாக்குப்பிடிக்கும். பின்னர் அவற்றில் சிதைமாற்றம் ஏற்பட்டுவிடும்.மேலும் பாதுகாக்க விரும்புவோர் ஏடு பெயர்த்து எழுதவேண்டும். இதில் மாற்றங்கள், திருத்தங்கள், புரியாத இடங்களில் நீக்கல்கள், சேர்த்தல்களுக்கு வாய்ப்பு உண்டு” என்பதாக அவரின் விளக்கம் அமைந்தது.  அவரையடுத்துப் பேசிய மயிலைபாலு கூடுதல் விவரம் தந்தார். “ பழைய இலக்கியங்களுக்கு உரையெழுதியவர்கள் பாடல்களில் சில சொற்கள் காணப்படாதபோது ‘ஏடு பெயர்த்து எழுதுவோர் விழ எழுதினார் போலும்’ என்று குறிப்பிடுவார்கள். விழ என்பதற்கு விடுபடுதல் என்று பொருள்.  திருக்குறளை எடுத்துக்கொண்டால் ‘அகர முதல’ என்று கடவுள்வாழ்த்தில் தொடங்கி ‘கூடி முயங்கப் பெறின்’ எனப் புணர்ச்சி மகிழ்தலில் முடியும். முதல் குறள் ‘அ’ வில் தொடங்கு கிறது. 1330 - ஆவது குறள் ‘ன்’ னில் முடிகிறது. அகர முதல் னகர இறுவாய் எனும் தமிழ் இலக்கணத்தை வள்ளுவர் என்னமாய்ப் பொருத்தியிருக்கிறார் என்று தமிழாசிரி யர்களூம் பற்றாளர்களும் வியந்து பேசும்போது நானும் வியந்திருக்கிறேன்.  ஆனால் திருக்குறளுக்கு முதல் உரைநூலாக ஒப்புக்கொள்ளப்படும் மணக்குடவர் உரையில் இந்த வைப்புமுறை இல்லை. அதில் இறுதிக்குறள் னகர மெய்யில் முடியவில்லை. அதிகார வைப்பு முறையும் வேறாக இருக்கிறது. இதற்குக் காரணம் ஓலைச்சுவடிகளில் திருக்குறள் பாதுகாக்கப்பட்டதாக இருக்கலாம். அடுத்த டுத்த காலத்தில் தொகுத்தெழுதியவர்க ளுக்கும் உரையெழுதியவர்களுக்கும் மாற்றம் செய்யும் விருப்பம் ஏற்பட்டிருக்கலாம் ” என்ற விளக்கமும் ஏற்புடையதாகவே இருந்தது. 

அடுத்து திருக்குறளின் எழுத்து வடிவத்திற்கு வந்தார் அ. கா.பெருமாள்.  “இன்று நாம் படிக்கும் எழுத்து வடிவில் வள்ளுவர் திருக்குறளை எழுதியிருக்க வாய்ப்பில்லை. திருவள்ளுவரின் காலம் கி.மு.என்பதால் அவர் வட்டெழுத்துக்களில் எழுதியிருப்பார் என்று நம்பலாம்” என்றார்.  திருக்குறள் மட்டுமல்ல இன்று நமது பெருமையாகவும் பெருமிதமாகவும் பேசப் பயன்படும் தொல்காப்பியமும் சங்கப் பனுவல்களும் எந்த எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. இவற்றைத் தொகுத்தவர்களும் அதற்கான குறிப்பைப் பதிவிட்டிருப்பதாக நினை வில்லை. இத்துடன் இயைபுடைய கருத்தினை மயிலைபாலு முன்வைத்தார்.  “கல்வெட்டுக்களில் பல காலப்பழமை யானவை. சங்க இலக்கியங்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்பு இல்லை என்பது ஒன்று.  மற்றொன்று சிறு சிறு இலக்கியப் பாடல்கள்கூட கல்லில் வடிக்கப் பட்டிருக்க வில்லை. மொழிநடையும் முற்றிலும் வேறுபட்டி ருக்கிறது. இதுபற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.” 

வரலாற்றுத் தரவுகளாகக் கல்லெழுத்துக்கள், சிற்பங்கள், கற்பாறை ஓவியங்கள் மாறியது பற்றியும், இதன் தாக்கத்தால் பல மாயைகள் உடைபட்டது -தொடர்ந்து உடைபடுவது பற்றியும் இந்தக் கூடுகை நிகழ்வில் உரையாடல் நடைபெற்றது.  தமிழி எனப்படும் பண்டைக்கால பிராமி எழுத்துக்களை நேரடியாகக் கணினியில் உள்ளிடும் மென்பொருள்  வடிவமைக்கப்பட்டிருப்பது இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக இருந்தது . என் எச் எம் ரைட்டர் என்கிற அப்ளிகேஷனைப்  பயன்படுத்தி தற்போதுள்ள தமிழ் எழுத்துக்கு இணையான தமிழி - பிராமி -  எழுத்துக்களைக் கணினியில் தட்டச்சு செய்யமுடியும். ( படம் காண்க)   இதே போன்று இன்னொரு புதுமை முயற்சியாக ஏற்கெனவே தொன்மை மொழியில் பயிற்சி பெற்றவர்கள் ‘சிறுபஞ்சமூலம்’  நூலின் செய்யுள்களை பிராமி எழுத்துக்களில் எழுதி நகல் எடுக்கப்பட்ட நூலும் வெளியிடப்பட்டது. பிராமி எழுத்துக்களில் வெளியிடப்பட்ட முதல் இலக்கிய நூல் இது என்றும் கூறலாம். 

பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறார்களுக்கும் கல்லெழுத்துப் பயிற்சி அளிக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் உமர் ஃபரூக்  கூறியது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. பள்ளியில் பாடம் நடத்துவது போல் ஓரிடத்தில் உட்காரவைத்து சொல்லித்தராமல்  அந்த சிறார்களை கல்லெழுத்துக்கள் இருக்கும்  இடத்துக்கே  அழைத்துச் சென்று எழுத்துக்களைக்காட்டி  படிக்கப் பயிற்சியளித்ததான தகவலும் பாராட்டும்படியாக இருந்தது.  நிறைவாக ஒரு விஷயம்.  பண்டைக்கால வரலாறுகளை அறிந்து கொள்ள இன்று  கல்வெட்டுக்களைத் தேடுகிறோம். கண்டடையும்போது களிப்புறுகிறோம்.பெருமிதம் கொள்கிறோம்.  இக்கால வரலாற்றை எதிர்காலத்தில் அறிவதற்கு நாம் எவற்றை விட்டுச் செல்லப்போகிறோம்?  காகித நூல்களையா?  கணினி மென்பொருள்களை யா? என்றும் அழியாத கல்லெழுத்துக்களிலா?  நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.