tamilnadu

img

நாங்கள் விவசாயிகள் இல்லையா?

ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் பெரும்பான்மையாக உள்ள பெண்களின் பங்களிப்பை மறைப்பது மிகக்கொடூரமானதாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாகுபடியாளர்கள் என்று இருப்பதை பெண் விவசாயிகள் என்று மாற்றி அவர்களுக்கான உரிமைகளை வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

ஆதியில் மனிதகுலத்தின் தலைவியாய்த் திகழ்ந்தவள் பெண்தான். கோழியைச் சுற்றி வாழும் குஞ்சுகள் போல, மனிதகுலம் தாய்வழிச் சமூகத்தில் வாழ்ந்து வந்தது. அக்காலத்தில் வேட்டையாடுவது முதல் போர் நடத்துவது வரை பெண்ணே தலைமை தாங்கினாள். கிடைக்கும் உணவை அனைவருக்கும் பங்கிட்டுத் தருவதிலும், குழு உறுப்பினர்களைப் பாதுகாப்பதிலும் தாயே தலைமை ஏற்றாள். குழந்தைகள் தாயை மட்டுமே அறிந்து, தாயை மட்டுமே சார்ந்து, தாயைப் பின்பற்றி, தாய்வழி நடந்தன. வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாறித் தனிச் சொத்துரிமை உருவாகிய பின், இனக்குழுக்களுக்குத் தலைமை தாங்கிய அந்த ஆதித் தாய் படிப்படியாக கீழிறக்கப்பட்டு, குடும்பத்தில் ஒரு பொருளாக்கப்பட்டாள். வேளாண் சமூக காலத்திலிருந்து நம் காலம் வரையிலும் உணவு உற்பத்தியிலும், சமூக வளர்ச்சியிலும் பெண்கள் முக்கிய பாத்திரம் வகித்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய உழைப்பை அங்கீகரிக்கின்ற அரசும், மதிக்கக்கூடிய சமூகமும் தற்போது இல்லை.

சொத்துரிமை 

விடுதலைக்குப் பின் பெண்களுக்கு வாக்குரிமை வந்தாலும், சொத்துரிமையும், நில உரிமையும் வராமல் இருந்தது. பெண்களுக்கு நிலம் வழங்கி உரிமையாளர்களாக மாற்றுவது ஒருபுறம் இருந்தாலும், தங்கள் குடும்ப நிலத்தில் பாடுபடும் பெண்கள் எவ்வித உரிமையும், அடையாளமும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். 1956ஆம் ஆண்டில் இந்து வாரிசுச் சட்டம் வந்த பின்னர்தான் ஆண்களுக்கே பூர்வீகச் சொத்தில் உரிமை வந்தது. பல கட்ட பெண்ணுரிமைப் போராட்டங்களுக்குப் பிறகு 2005ஆம் ஆண்டு இந்து வாரிசு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு என்று உறுதி செய்யப்பட்டது.இதற்கு முன்பு 1989 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டத்தை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டுவந்தது. இதன் மூலம் பரம்பரைச் சொத்து உள்ள இடங்களில் பெண்களுக்கு வீடோ அல்லது நிலமோ கிடைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1997-2002) அரசு விநியோகித்த நிலங்களில் 40 சதம் பெண்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. மீதி நிலங்கள் கணவன்-மனைவி பெயரில் கூட்டு பட்டாவாக வழங்கப்பட்டது இருப்பினும் உழைக்கும் பெண்கள் எவ்வித அங்கீகாரமோ, அடையாளமோ இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விவசாயத்தில் பாதி பெண்களே 
நிலத்தில் பாடுபட்டு உணவு உற்பத்தி செய்வதில் ஆண்களைவிட பெண்களே அதிக நேரம் உழைக்கிறார்கள். நிலத்தை உழுது முடித்தபின், பயிர் வளர்வதற்கு முக்கிய வேலைகளான விதைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், உரமிடுதல், கதிரறுப்பு போன்றவை பெண்கள் உழைப்பினால் நடப்பவை. அதே போல கால்நடைகள் பராமரிப்பிலும், பால் உற்பத்தியிலும் பெண்களின் பங்கு மகத்தானது. அதிகாலையில் சாணம் அள்ளுவதிலிருந்து, மாடுகளுக்குத் தீவனம் வைப்பது, தண்ணீர் காட்டுவது போன்ற வேலைகளை பெண்களே செய்கிறார்கள். குடும்பத் தலைவராக இருக்கிறவருக்கு வீட்டில் எத்தனை கோழிகள், குஞ்சுகள், சேவல்கள் இருக்கின்றன என்பது தெரியாது. ஆனால் விவசாயப் பெண்களுக்கு அவைகளின் அடைகாக்கும் பருவம், முட்டையிடும் நேரம் இவையெல்லாம் தெரியும். மாலையில் கோழிகளை அடைத்து வைப்பதும், காலையில் அவைகளை திறந்து விடுவதும் பெண்களின் வேலைகளாகவே இருக்கின்றன. நாட்டில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான உணவையும், 90 சதவீதம் பாலையும் பெண்களே உற்பத்தி செய்கிறார்கள். விவசாய வேலைகளையெல்லாம் செய்துமுடித்த பிறகும், குடும்பத்தின் உணவுக்கும், குடிநீருக்கும் பெண்களே பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார்கள்.

உரிமைகள் மறுப்பு 
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி மூன்று கோடியே அறுபது லட்சம் பெண்கள் சாகுபடியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு எவ்வித அடையாள அட்டையும் மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ஆண்கள் பல நேரங்களில் வேலை தேடியும், வேறு காரணங்களுக்காகவும் வெளியூர் செல்லும் காலங்களில் பெண்களே அனைத்து விவசாய வேலைகளையும் செய்கிறார்கள். பெண் விவசாயிகளை அங்கீகரித்து அடையாளப் படுத்தாமல் போவதால் அவர்கள் பல உரிமைகளையும், சலுகைகளையும் இழந்து வருகிறார்கள். ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் பெரும்பான்மையாக உள்ள பெண்களின் பங்களிப்பை மறைப்பது மிகக்கொடூரமானதாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாகுபடியாளர்கள் என்று இருப்பதை பெண் விவசாயிகள் என்று மாற்றி அவர்களுக்கான உரிமைகளை வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

சாகுபடியாளர்களுக்கும் (கல்டிவேட்டர்ஸ்) விவசாயிகளுக்கும் என்ன வித்தியாசம்? மத்திய அரசின் சட்டப்படி ஒரு சிறு நிலத்தில் குத்தகையாகவோ, கூலிக்காகவோ விவசாயம் செய்பவர்கள் சாகுபடியாளர்கள். யாருடைய பெயரில் நிலப் பத்திரம் உள்ளதோ அவர் நிலத்தில் இறங்கி வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவரே விவசாயி. மேலும் விவசாய நிலத்தில் வேலை செய்யக்கூடிய 87 சதவீதம் பெண்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. அரசின் கணக்குப்படி அவர்கள் விவசாயிகள் இல்லை. அப்பெண்கள் சாகுபடியாளர்களாக இருப்பதால் மற்ற விவசாயிகளுக்குக் கிடைப்பதுபோல் விவசாயக் கடன், பயிர்க்கடன், உரமானியம், விதை மானியம், விவசாயி கடன் அட்டை, ( கிசான் கிரிடிட் கார்டு) வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் போன்ற சலுகைகள் கிடைப்பதில்லை. இதனால் பெண்களின் உற்பத்தி மதிப்பு தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது.

பெண் விவசாயி தற்கொலை செய்தால் நிவாரணம் இல்லையா?

2012களில் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில் பகுதிப்பேர் பெண்கள். ஆந்திர அரசு ஜி.ஓ. 421 என்ற சட்டத்தை இயற்றி, அதன் மூலம் நில உரிமையாளர்கள் மட்டுமே விவசாயிகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருந்தார்கள். நிலத்தில் பாடுபடும் பெண்களோ, விவசாயத் தொழிலாளர்களோ உயிரை மாய்த்துக்கொண்டால்  அவர்களுக்கு நிவாரணம் கிடையாது. அந்தக் காலகட்டத்தில் 90 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக நிவாரணம் வழங்கினார்கள். உண்மையில் இதைவிட நான்கு மடங்கு விவசாயிகள் தங்கள் உயிரைப் போக்கிக்கொண்டதாகவும், அவர்களில் பெண்களும், விவசாயத் தொழிலாளர்களும் அடங்குவார்கள் என்றும் விவசாய சங்க அறிக்கை கூறுகிறது. தனியார் நிதிநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் கொடுத்த கடனுக்காக வீட்டிலுள்ள விவசாயப் பெண்களை மானக்கேடாக பேசும்போது, அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு சான்றுகளுடன் வருவாய்துறையில் நிவாரணத் தொகைக்காக விண்ணப்பித்தால், நில உரிமையாளர்கள் தற்கொலை செய்துகொண்டால்தான் நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.

வெற்றிபெறாத முயற்சி

 பெண் விவசாயிகளை அங்கீகரித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென்பது புதிய கோரிக்கை அல்ல. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, ‘பெண் விவசாயிகள் மசோதா’வை 2011ல் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். உணவு உற்பத்தியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றும் பெண்களுக்கு ‘பெண் விவசாயிகள் சான்றிதழ்’ வழங்கக் கோருவது இம்மசோதாவின் முக்கிய அம்சமாகும். நிலத்தில் உழைக்கும் பெண்களை இச்சான்றிதழ் ‘விவசாயி’ என அங்கீகரிக்கிறது. இதன்படி மற்ற ஆண் விவசாயிகளைப்போல் மானியம், கடன், மற்றும் பணப்பயன்கள் பெறமுடியும். இந்த சான்றிதழ் மூலம் விவசாயி கடன் அட்டையும் (கிசான் கிரிடிட் கார்டு) பெண் விவசாயிகளுக்கு கிடைக்கும். ஆண் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அட்டை பெறுவதற்கு நில உரிமை ஆவணம் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழின்படி பெண் விவசாயிகளுக்கு நிலப் பட்டா தேவையில்லை. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மசோதா காலாவதியாகிப்போனது.

அமிதாபச்சன் விவசாயியா?
மறுபுறத்தில் யாரெல்லாம் விவசாயிகளாக வருகிறார்கள் என்று பார்த்தால் மிகுந்த வேதனையாக இருக்கிறது. திரைப்படத்தில் நடிப்பதற்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் என்றுமே நிலத்தில் இறங்கி வேலை செய்யாதவர். அவருடைய பெயரில் நிலம் இருந்ததால் விவசாயி என்று அங்கீகரிக்கப்பட்டு, அவர் வாங்கிய விவசாயக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருடைய மனைவியும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவருமான ஜெயாபச்சன் பெண் விவசாயி என அங்கீகரிக்கப்பட்டு, அரசு மானிய உதவிகளைப் பெற்றுள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரர். விவசாயி இல்லை. ஆனால் அவர் மும்பையிலும், மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல நகரங்களிலும் விளை பொருட்களை சேமித்து வைப்பதற்காக விவசாயக் குடோன்கள் கட்டியிருந்தார். இதற்காக இவர் விவசாயி என்று வகைப்படுத்தப்பட்டு, வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வாங்கி, பின்னர் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அக்கட்டிடங்களெல்லாம் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டின் குடோன்களாக மாறியுள்ளன. அந்தோ! இதே மகாராஷ்ட்ராவில்தான் தங்களுடைய விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமலும், கடன் தொல்லையாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து மாண்டு போனார்கள்.

சொத்துரிமை இல்லாத பெண்கள்நிலை

கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் காட்டு வேலை செய்பவர்கள், தோட்ட வேலை பார்ப்பவர்களையெல்லாம் தொழில் என்ற காலத்தில் விவசாய வேலை என்றே படிவத்தில் நிரப்பப்பட்டுள்ளது. சாகுபடியாளர்கள், ஆண் விவசாயிகள், பட்டா உள்ளவர்கள், பட்டா இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் விவசாய வேலை என்ற வகைப்படுத்தலில் அடங்குகிறார்கள். ஆனாலும் பெண் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு அடையாள அட்டை வழங்கவில்லை. ஆணாதிக்க சமூகத்தில் சொத்துரிமை இல்லாத பெண்கள் சுயமரியாதையோடு நடத்தப்படுவதில்லை. சமூகத்தில் பெண்களுக்கெதிரான மனநிலைகள் அதிகமாகி, வன்முறை நிறைந்த ஒடுக்குமுறை என்றும் உள்ளது. கல்வியும், நாகரீகமும் அதைச் சிறிதளவே மாற்றியிருக்கின்றன. இந்நிலையில் அரசு, பெண்களின் உழைப்பை அங்கீகரித்து அடையாளப்படுத்தினால், அவர்களுக்கு தற்சார்பும், சுயமரியாதையும் கிடைக்கும்.