பேசும் காச்சக்காரம்மன் – 2
காய்ச்சல் வந்த குழந்தைக்கு ஆசப்பட்டதை வாங்கித் தருகிறோம் என்று எண்ணெயில் வறுத்த பிரைடு ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், பரோட்டா என்று வாங்கித் தருகிற பாசக்கார பெற்றோர்கள் நிறைந்துவிட்ட சமூகத்தில் உண்மையிலேயே காய்ச்சலுக்கான உணவு என்ன என்பதை இன்றைய தலைமுறையினர் மறந்தே போய்விட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேற்கத்தியவர்களுக்காக உருவாக்கப்பட்ட அல்லோபதி மருத்துவமனைகளில் அவர்கள் அன்றாடம் சாப்பிடுகிற பாலும் பிரட்டுமே உணவாகத் தரப்பட்டது. பின்னாட்களில் நம்மவர்களுக்கென்று அத்தகைய மருத்துவமனைகள் திறந்துவிடப்படுகையில் பாலும், பிரட்டும், பிஸ்கட்டுகளும் நமது ஆரோக்கியத்திற்கான உணவுகளாய் மாறிப்போய்விட்டன. இன்றைக்கும் காய்ச்சல் வந்தால் நமது தினசரி வயிற்றை நிரப்புகிற உணவாக இவையெல்லாமே ஆகிவிட்டது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்குள்ளாக நமது உடல் சுகவீனத்திற்கான உணவுமுறைகளை நவீனத்தின் கையிலே காவு கொடுத்துவிட்டோம். நமது நோயுண்ட உடலை மேலும் நோய்மைப்படுத்துகிற உணவுகளையே சாப்பிடத் துவங்கியிருக்கிறோம். மருத்துவம் என்பது ஒரு துறையாகவோ, தொழிலாகவோ, மருத்துவர்கள் என்ற குறிப்பிட்ட பிரிவினரோ இல்லாத காலகட்டத்தில் மருத்துவம் என்பது அன்றாடம் மக்கள் சாப்பிடுகிற உணவைச் சார்ந்ததாகத்தான் இருந்திருந்திருக்கும்.
‘உணவே மருந்து’ என்கிற சிந்தாந்தத்தை வாழ்வியலாகக் கொண்ட மக்கள் கூடி வாழ்ந்திருந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்விடங்களைச் சுற்றி கிடைக்கிற அரிசி, கிழங்கு, தானியங்களை பசிக்கையில் உணவாகவும், உடல் ஆரோக்கியமற்றுப் போகையில் அதனையே மருந்தாகவும் பயன்படுத்தியிருக்கக்கூடும். ஆக, இந்த நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட உணவு முறையிலிருந்து முறைதவறி இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது நாட்டார் தெய்வ வழிபாடுகளில் போய்தான் தேடிப் பார்க்க வேண்டும். அதற்காக யாரும் ஊர் ஊராக சுற்றித் திரிய வேண்டும் என்று சொல்லவில்லை. தென்மாவட்டங்களில் ஒன்றான வெயிலுக்குப் பெயர் போன விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லுங்கள். ஆம், அங்குதானே காய்ச்சலென்றால் நேத்திக்கடன் போட்டு வழிபடுகின்ற மூன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய காச்சக்காரம்மன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். காச்சக்காரம்மன் கதை இதுதான். எங்கோ தொலை தூரத்திலிருந்து அண்ணன், தங்கை இருவரும் ஆடு மேய்த்தபடி விருதுநகருக்கு வந்து, வந்த இடத்தில் தீராத காய்ச்சல் நோயால் அங்கு படுத்துறங்கும் போதே இறந்துவிட்டனர். அய்யோ! இப்படி ஊர் பேர் தெரியாத இரண்டு பேர் கவனிப்பாரின்றி நம் ஊருக்கு வந்து இறந்துவிட்டனரே என்று பரிதாபப்பட்டு ஊர்மக்கள் அவர்களுக்கு சிலையெடுத்து வழிபட்டனர். ஆரம்பத்தில் அம்மன் சிலை சுமார் இருபது அடியில் படுத்துறங்குகிற நிலையிலே சுண்ணாம்பால் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வசதியாக கோவிலைக் கட்டுகிறோம் என்று இதை இடித்துவிட்டு சின்னதாக சிமெண்டால் கட்டி வைத்திருக்கிறார்கள். பொதுவாக இறந்தவர்களை சாமியாகிவிட்டார்கள் என்று சொல்கிற வழக்கு நம்மிடம் இருக்கிறது. நம் வீட்டில் இறந்த மூத்தவர்களுக்கு வருடாவருடம் சாமி கும்பிடுகிற வழக்கமும் நம்மிடம் தொன்றுதொட்டு இருக்கிறது. இப்படியாக உருவான காச்சக்கார அம்மனிடம் கற்றுக்கொள்ள அப்படி என்னதான் விஷேசம் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி.
அப்படியென்றால் எங்களுக்கெல்லாம் காய்ச்சல் வந்தால் விருதுநகர் பஸ்ஸேறி வந்து சாமி கும்பிட்டுவிட்டு போகச் சொல்கிறீர்களா என்று அவசரப்பட வேண்டாம். நாம் 300 வருடங்களுக்கு முன்பாக காய்ச்சலுக்கு எப்படிப்பட்ட உணவை சாப்பிட்டு வந்திருப்போம் என்கிற பண்பாட்டுக் கூறுகளை இத்தகைய காச்சக்காரம்மன் வழியே நம்மால் கண்டறிய முடியும். ஏனென்றால் நாட்டார் தெய்வ வழிபாடுகளில் பொதுவாக மக்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதையேதான் அம்மனுக்கும் படைப்பார்கள். ஆதலால் அம்மனுக்கு படைக்கப்படும் உணவே காய்ச்சல் வந்தவர்களுக்கான அன்றைய மக்களின் உணவாக இருந்திருக்கும் அல்லவா! விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் தன் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்துவிட்டால் சாதி பேதமின்றி இங்கு வந்து குணமடைய வேண்டி படையலிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள். சிலர் காய்ச்சல் வந்தால் வேண்டிக் கொண்டு சரியாகிய பின்பு அதற்கு நிவர்த்திக் கடனாகவும் உணவு படையலிட்டு வணங்குகிறார்கள். அன்று புத்தம்பது மண்பானையில் பச்சரிசி அல்லது கைக்குத்தல் அரிசியை நன்கு குழைய உப்பில்லாமல் சமைத்து, கூடவே மிளகு ரசம் வைத்து, சுண்டவற்றலை ரசத்துடன் சேர்த்தோ அல்லது தனியாக வறுத்தோ அம்மனுக்குப் படைக்கிறார்கள். இதில் உணவு படைக்கின்ற போது எச்சில் படாதவாறு சுத்தபத்தமாக சமைத்து அம்மனுக்குப் படையலிட வேண்டும். பின்பு அதனை காய்ச்சல் வந்த குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுகிறார்கள். சிலர் கோவிலுக்கு வருபவர்களுக்கும் பிரசாதமாக கொடுப்பதுண்டு. ஆனால் கட்டாயம் சமைத்ததை வீட்டிற்கு எடுத்துச் செல்லமாட்டார்கள்.
நிலையில் காச்சக்காரம்மன் வீற்றிருக்கிறாள். இங்கும் அதே சாதம், ரசம், சுண்டவத்தல்தான் படையல். ஆனால் இங்கு வந்து சமைத்துப் போடும் அளவிற்கு இடவசதியின்மை காரணமாக வீட்டில் வைத்தே பத்தியத்தோடு சமைத்து இங்கு வந்து படையலிட்டு சாப்பிட்டுச் செல்கிறார்கள். இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உணவு படையலைத்தான். முதலில் காய்ச்சல் வந்து இறந்த அம்மன் மீது பரிதாபப்பட்டு மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தால் தருகிற ரசஞ்சோற்றையும், தொட்டுக் கொள்ள சுண்டவற்றலையும் பாசத்தோடு படைத்து வணங்கியிருப்பார்கள். பின்னாட்களில் காய்ச்சல் வந்தவர்கள் இத்தகைய உணவை வேண்டிக் கொண்டு அம்மனுக்குப் படைத்தால் காய்ச்சல் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை காரணமாக இத்தகைய வழிபாட்டு முறையை உருவாகியிருக்கியிருப்பார்கள். ஆகவே சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக காய்ச்சல் வந்தால் வீட்டில் அரிசி சாதத்தை கஞ்சி போல நன்றாக குழைய சமைத்து ரசம் சோறாக ஆக்கிப்படைத்து சுண்டவத்தலும் உணவாக சாப்பிட்டிருப்பார்கள் என்பதை அறியலாம். அன்றாடம் சாதத்தை விதைவிதையாக சமைத்து சாப்பிடுவபவர்கள் காய்ச்சல் வந்தால் கஞ்சியாகவும், காய்ச்சல் வந்தால் மட்டும் மிளகு ரசம் வைத்து மற்ற நாட்களில் சாதாரணமாக ரசம் வைத்து சாப்பிடுவதும் தங்கள் உணவை பசிக்காகவும், குணப்படுத்தும் மருத்துவத்திற்காவும் மாற்றி பயன்படுத்தியிருப்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா. சரி, இப்போது இத்தகைய உணவு முறை எவ்வாறு காய்ச்சலுக்கு உகந்ததாகப் பயன்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்ப்போம். அம்மனுக்குப் படைக்கும் போது எச்சில் படாமல் சுத்தபத்தமாக செய்கிறார்கள் அல்லவா? காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு வருவோருக்கு மருத்துவர்கள், சாப்பிடும் முன் கைகளை சுத்தமாக கழுவி விட்டு சாப்பிட வேண்டும். சளியை சீந்தி வெளியேற்றும்போது கைக்குட்டையை உபயோகிக்க வேண்டும். இருமல் வந்தால் மற்றவர் மேல் படாதவாறு கைகளை வைத்து மறைத்தவாறு இரும வேண்டும் என்று ஓயாமல் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அம்மன் சொன்னதாகச் சொன்னால் செல்லப் பிள்ளையாகக் கேட்டுக் கொள்கிற நம் மக்கள் அறிவியலைக் காரணம் காட்டி அறிவுறித்தினால்தான் கேட்க மாட்டேன் என்கிறார்களே, என்ன செய்வது? எந்தவொரு நோய் வந்தாலும் எல்லாம் சரியாகிவிடும் (Reassurance) என்கிற நம்பிக்கையை, ஆறுதலை மருத்துவர்கள் நோயாளிக்கு முதலில் விதைக்க வேண்டும். நோய்க்கான மருந்து மாத்திரைகளைவிட நோயாளிக்கு அத்தகைய ஆறுதலே முதல் தேவையாகிறது. இப்போதெல்லாம் மருத்துவமனை கூட்டத்தில் சாகவாசமாக நின்று பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் போயிற்று. ஆனால் அத்தகைய உளவியலை நாட்டார் தெய்வங்கள் காலங்காலமாக கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்கள் தெய்வத்திற்குச் சமம் என்கிற கூற்றை நன்றாக உள்வாங்கிக் கொண்டு மருத்துவர்களும் நோயாளிகளுக்கு பரிபூரணமாக சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது.
இத்தகைய பண்பாட்டு முறை வழியே காய்ச்சல் சரியாகிவிடும் என்கிற உளவியல் மட்டுமல்ல, அங்கு படைக்கப்படும் உணவின் வழியேயும் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது. அது எப்படி என்று யோசிக்கின்றீர்கள் தானே? அதற்கு நாம் இரைப்பை மற்றும் குடல் பகுதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் வருகின்ற போது உணவுக்குழாயிலிருந்து இரைப்பை, குடல் பகுதிகள் என உணவுச் செரிமானப் பகுதிகளும் அவதிக்குள்ளாகிறது. அதன் குழாய் போன்ற பகுதியின் உள்ளடுக்குகளில் மென்மையான ஜெல்லி போன்ற பகுதியிலும் நீர் கோர்த்து அல்சர்கூட காய்ச்சலின் தன்மைக்கேற்ப வந்துவிடும். இப்படியான சூழலில் நோயாளிக்கு வாய் கசப்பாக இருக்கும், எதுவுமே வாய்க்கு ஒவ்வாதவாறு தோன்றும், பசியெடுக்காமல் வயிறு மந்தமாக இருக்கும், சாப்பிட்ட உணவும் இரைப்பை புண்ணால் மெது வாகவே செரிமானமாவதால் வயிற்றுப் பகுதியில் வலி எடுக்கும், குடலும் மெதுவாகவே கழிவுகளை வெளியேற்றுவதால் செரிமானமாகாத உணவை சிலர் சாப்பிடுகையில் மலச்சிக்கலும்கூட ஏற்படும். இப்படியான உணவு செரிமானப் பகுதிக்குத் தகுந்த உணவை காய்ச்சல் வந்த நாட்களில் சாப்பிட்டால்தானே நோய் விரைவாகக் குணமாகும். அதனால் தான் படையலில் திட உணவாக இல்லாமல் நன்கு குழையவிட்டு சமைப்பதும், காய்ச்சல் காலத்தில் கஞ்சியாக உணவை சாப்பிடச் சொல்லும் வழக்கமும் இருக்கிறது. அதைவிட்டு விட்டு சிக்கனும், பரோட்டாவுமாக வாங்கிச் சாப்பிட்டால் வயிறு என்னத்திற்கு ஆகும் என்று பெற்றோர்கள் எல்லோருமே சிந்தித்துப் பார்க்க வேண்டும். அம்மனுக்கான உணவில் கைக்குத்தல் அரிசியும், பச்சரிசியும் உபயோகப்படுத்துகிறார்கள். இதில் உமி மட்டுமே நீக்கப்படுவதால் காய்ச்சல் வந்தவர்கள் சாப்பிடும்போது தேவையான சத்துகள் அவர்களுக்குத் தவறாமல் கிடைத்துவிடுகின்றன. ஆனால் இன்றெல்லாம் அரிசி ஆலைகளில் செருப்பைத் தேய் தேயென்று தேயத்து பாலிஸ் போடுவதைப் போல அரிசியை பட்டை தீட்டி உமிக்கு கீழே உள்ள தவிடையும் நீக்குவிடுகிறார்கள். இதன் மூலம் காய்ச்சல் காலத்தில் நமக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமலேயே போய்விடுகிறது. அதுசரி, உப்பில்லாமல் படையலிட்டு சாப்பிடு கிறார்களே, அப்படியென்றால் எங்களையும் உப்பு சப்பில்லாமல் சாப்பிடச் சொல்கிறீர்களா? என பதட்ட மாக வேண்டாம். பண்டைய காலத்தில் உப்பில்லா மல் சாப்பிடுவது என்பது வறுமைக்கான அடையாள மாகப் பார்க்கப்பட்டது. பொதுவாக மக்கள் கடவுளி டம் வேண்டிக் கொள்கையில் பட்டினி இருத்தல், மண் சோறு சாப்பிடுதல் என்று தன்னை வறுத்திக் கொள்வ தன் வழியேதான் நேர்த்திக்கடன் போடுவார்கள். அம்மனுக்கு உப்பில்லாமல் படைத்துச் சாப்பிடுவது என்பது அவர்களை வறுத்திக் கொள்வதன் அடையாளமே ஒழிய காய்ச்சலுக்கும் உப்பில்லாத சோறுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
நமக்கு காயச்சல் வந்தால் இன்றும் தாய்மார்கள் ரசம் சோறு வைத்துதான் கொடுக்கிறார்கள். இது முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய உணவுப் பண்பாட்டின் எச்சம்தானே. மேலும் ரசம் செய்வதற்குத் தேவையான முக்கிய அஞ்சறைப்பெட்டி பொருட்களான மிளகு, சீரகம் என்பவை மருத்துவகுணத்தை உள்ளடக்கியது. மிளகு(Piper Nigrum) சித்த மருத்துவ முறையில் அதிகம் கையாளப்படும் ஒரு தாவரம். இது காய்ச்சலைக் குறைக்கும் தன்மையுடையது. உணவை எளிதில் செரிமானமடையச் செய்கிறது. சீரகம் (Cuminum Cyminum) முக்கியமாக செரிமான பிரச்சனைகளைத் தீர்க்கவல்லது. சுண்டைக்காய்(Solanum torvum) ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது உடல் வெப்பத்தைக் குறைப்பதுடன் அதனால் ஏற்படுகிற உடலின் உட்புற அலர்ஜியையும் மட்டுப்படுத்துகிறது. மேலும் இதிலுள்ள வேதிப்பொருள் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆக, பெற்றோர்களாகிய நாம் காய்ச்சலுக்காக மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு பக்கம் காய்ச்சல் வந்தால் நம் குழந்தைகளுக்காக சரியான உணவைத்தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறோமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com