tamilnadu

img

உலகப் பொது எதிரியை வீழ்த்த ஒருங்கிணைந்த போராட்டம் 230 கட்சிகள் கூட்டாக வெளியிட்ட திறந்த மடல்

உலகின் 230 முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து இம்மாதம் முதல் நாளன்று விடுத்த திறந்த மடல் இது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சி மேற்கொண்ட இம்மடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, பங்களாதேஷ் கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு நாடுகளின் இடதுசாரி கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

இன்று, உலகமெங்கும் கோவிட்-19 விரைவாகப் பரவிடும் நிலையில், அது மனித இனத்தின் உடல்நலத்திற்கும். உலக அமைதி மற்றும் மேம்பாட்டுக்கும் மிகவும் அவசரம் வாய்ந்த, மிகக் கடுமையான சவாலாகியுள்ளது. முன்னெப்போதும் காணாத இந்தச் சூழலில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளாகிய நாங்கள், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது, தேச முன்னேற்றத்தை வளர்த்தெடுப்பது, உலக அமைதியையும் உறுதித்தன்மையையும் பாதுகாப்பது என்ற பெரும் பொறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பின்வரும் கூட்டு வேண்டுகோளை விடுக்கிறோம்:

►   மனித உயிர்களைக் காப்பதிலும், மக்களின் உடல்நலத்தைப் பேணுவதிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள அனைவருக்கும், குறிப்பாக சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு, எங்களது மிக உயர்ந்த மரியாதையைக் காணிக்கையாக்குகிறோம். கோவிட்-19 வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்போருக்கும், அதன் அச்சுறுத்தலுக்கு உள்ளான வாழ்க்கையை எதிர்கொண்டிருப்போருக்கும், இதனால் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் எங்களது இதயப்பூர்வமான அனுதாபங்களையும் ஆறுதல்களையும் உரித்தாக்குகிறோம். இந்த நோயின் தாக்குதலால் கெடுவாய்ப்பாக உயிரிழந்தோருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

►      கோவிட்-19 பரவல் மிகுந்த செயல்திறனோடும் காலந்தவறாமலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், மிக அதிகமான மக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் உடல்நலத்திற்கும் பெருங்கேடு ஏற்படுத்திவிடும், பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் உலகநாடுகளுக்கு இடையேயான பரிமாற்றங்களிலும் ஒத்துழைப்புகளிலும் மிகக்கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திவிடும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அனைத்து நாடுகளும் வேறு எதையும்விட தங்களது மக்களின் உயிர், பாதுகாப்பு, உடல்நலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், கோவிட்-19 பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடத் தீர்மானகரமான, செயலாற்றல் மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

►     நாடுகள் தங்களுடைய குறிப்பான தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப கோவிட்-19 நோயை முறியடிப்பதற்காக திடீர்நிலைமைக்கான திட்டங்களையும் வழிமுறைகளையும் செயல்படுத்த, ஒத்துழைப்புகளை வலுப்படுத்த, அதற்கு இணையாக நோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் அதரவளிக்கிறோம். இவ்வேளையில், விரைவான மிகச்சிறப்பான விளைவுகளைச் சாத்தியமாக்கிட நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
 

►     அனைத்து நாடுகளின் பொதுமக்களும் நோய்த் தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு உரிய சமூகப் பொறுப்புணர்வோடு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். கோவிட்-19 நோயை முறியடிப்பதில் அனைத்து சமூகப் பிரிவுகளின் ஆற்றலைத் திறந்துவிடும் வகையில் குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டர்களின் வலிமையை முழுத் திறனோடு பயன்படுத்துவதற்கு நாடுகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
 

► அனைத்து நாடுகளும் நோய்த்தொற்றுத் தடுப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வேளையில், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை உறுதிப்படுத்தும் ஒருங்கிணைந்ததோர் அணுகுமுறையை வகுக்கவும், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பிரிவினருக்கும் சிறிய-நடுத்தர தொழில்களுக்குமான இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்களின் வாழ்க்கைத் தரத்திற்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவுமான தங்களது உறுதிப்பாடுகளை நிறைவேற்றவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். உலகளாவிய நிதிசார் சந்தையின் நிலைத்த தன்மையைப் பராமரிப்பதற்கும், அதே போல் தொழில் மற்றும் விநியோகச் சங்கிலித் தொடர்புகளைப் பராமரிப்பதற்கும் நாடுகளுக்கு இடையேயான பெரும்பொருளாதாரக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பை வளர்த்திட வேண்டும், உலகப் பொருளாதச் சரிவு ஏற்படுவதைத் தடுக்க வணிகச் செயல்பாடுகளுக்கான வரிவிகிதங்களைக் குறைக்க வேண்டும் அல்லது விலக்களிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
 

► பொருட்படுத்துவதில்லை, எந்த நாடும் இந்தத் தாக்குதலைத் தனியாக நின்று எதிர்கொள்ள முடியாது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். நிலைமை மேலும் மேலும் சிக்கலாகிவரும் நிலையில், மனிதகுலத்திற்காக எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், ஒருவர்க்கொருவர் செயல்முனைப்போடு உதவியும் ஆதரவும் அளித்திடும் வகையில் நாடுகள் தங்கள் உணர்வை ஒரு சமூகமாகத் தங்கள் உணர்வுநிலையை உயர்த்திக்கொண்டாக வேண்டும். நாடுகளுக்கிடையே நெருங்கிய ஒத்துழைப்புகள், ஒருங்கிணைந்த கொள்கைகள், ஒன்றுபட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதும், உலக அளவில் வளஆதாரங்களையும் வலிமைகளையும் அணிதிரட்டுவதுமே ஒட்டுமொத்த மானுடத்தின் பொது எதிரியான இந்தக் கிருமியை நாம் முறியடிக்கத் துணை செய்யும்.
 

► சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் கோவிட்-19 எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இது பன்னாட்டுச் சமூகத்தின் இதர பகுதியினருக்குக் கால வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அனுபவத்தை வழங்கியுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகள் ஒரு திறந்த, வெளிப்படையான, பொறுப்பான மனப்பாங்கைக் கையாண்டு உரிய தகவல்களைக் காலத்தே வெளியிடுவது, நோய்க் கவனிப்பு மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, குறிப்பாக பாதிப்புக்குள்ளான இதர நாடுகளுக்குத் தங்களால் இயன்ற அளவுக்கு மருத்துவப் பொருள்களையும் இதர பொருள்களையும் வழங்குவது ஆகிய செயல்களை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.
 

►     கோவிட்-19 தொடர்பாக ஜி-20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களது வழக்கமீறிய உச்சிமாநாடு வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். நாடுகள் நோய்த்தாக்குதலைக் கட்டுக்குள் கொண்டுவருவதில், குறிப்பான மருந்துகள், நோய்த்தடுப்பு மருந்துகள், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்பட, அனுபவங்களையும் மருத்துவ ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்துவதற்கு   நாங்கள் ஆதரவளிக்கிறோம். வளரும் நாடுகளுக்கும், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பொதுசுகாதார அமைப்புகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் ஆதரவுகளைப் பொருளாகவும் தொழில்நுட்பமாகவும் இதரவகையிலும் வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். ஒத்துழைப்பு என்ற சூரிய வெளிச்சம் பெருந்தொற்றுக் காரிருளைப் போக்கட்டும்.

►     நோய்த்தடுப்பு வழிகள், கிருமியின் மூலப்பிறப்பு ஆகியவை போன்ற பிரச்சனைகள் குறித்து அறிவியல் அடிப்படையிலான, தொழில்சார் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பொது சுகாதாரப் பிரச்சனைகளை அரசியலாக்குவதையும், கோவிட்-19 என்ற சாக்கில் பிற நாடுகளைக் களங்கப்படுத்துவதையும் நாங்கள் வலுவாக எதிர்க்கிறோம். எந்தவொரு நாடு, வட்டாரம், இனப்பிரிவுக்கும் எதிராகச் செய்யப்படும் அனைத்துப் பாகுபாட்டு விமர்சனங்களையும் செயல்களையும் நாங்கள் உறுதியாக எதிர்த்து நிற்கிறோம். அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் தங்களின் பொறுப்பில் உள்ள வெளிநாட்டவர்கள், மாணவர்கள் ஆகியோரது சுகாதாரம், பாதுகாப்பு, நியாயமான நலன்களைப் பாதுகாத்திட முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
 

► கோவிட்-19 தாக்குதல் அனைத்து நாடுகளுக்கும் கலந்துரையாடல் மூலமாகவும், கூட்டுச்செயல்பாட்டின் மூலமாகவும் வளர்ச்சிப் பகிர்வைச் சாதிப்பது குறித்த உலகளாவிய செயலாளுகைக் கண்ணோட்டத்தை மேலும் வளர்த்தெடுப்பதன் தேவையையும், உலகளாவிய பொது சுகாதாரச் செயலாளுகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் முன்னணிப் பாத்திரத்திற்கு ஆதரவாக இருப்பதன் தேவையையும்  பளிச்சென எடுத்துக்காட்டியுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். பொது சுகாதாரத்தில் பகிர்வுள்ள எதிர்காலத்துடன் கூடியதோர் உலகச் சமூகத்தைக் கட்டமைக்க நாம் பாடுபடுகிற நிலையில், செயல்திறனோடு நாடுகளுக்கிடையே நோய்த்தடுப்புக்கும் கட்டுப்பாட்டிற்கும் ஜி-20 மற்றும் நாடுகளிடையேயான இதர ஏற்பாடுகளின் கட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மென்மேலும் வளர்த்தெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
 

►     உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகள் என்ற முறையில் நாங்கள், அசாதாரணமான சூழலில் நெருக்கமான தொடர்பைப் பராமரிக்கவும், கோவிட்-19க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் அரசியல்பூர்வ ஆற்றலைச் செலுத்திடும் நோக்கத்திற்காக, உரிய கடமையாகிய அரசியல் வழிகாட்டல் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் பொறுப்பேற்கிறோம். தற்போதைய கடினப்பாடுகள் தற்காலிகமானவையே என்று நாங்கள் நம்புகிறோம் – ஒவ்வொரு புயலுக்கும் பிறகு நிச்சயமாகக் கதிரொளி எழுவது போல.
தமிழில்:  அ.குமரேசன்