tamilnadu

img

ஆண்டைகளுக்கு அடிமைகளாக்கி அனுப்ப ஐந்தாம் வகுப்பில் அரசுத் தேர்வா? - நா.முத்துநிலவன்

“10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வோடு கூடுதலாக 3, 5, 8 வகுப்புகளில் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி – திறன்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அடுத்த வகுப்புக்குச் செல்ல இத்தேர்வுகள் அவசியம். குறிப்பாக, 3-ஆம் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு அடிப்படைக் கல்வி அறிவுக் கணக்கீட்டுத் திறன் மற்றும் ஏனைய கல்வித் திறன்களைப் பரிசோதிக்க உதவும் (பக்கம் 107, பி4.9.4) என்கிறது மற்றொரு பரிந்துரை. தேசிய அளவில் 6 வயது முதல் 18 வயது வரையில் ஒட்டுமொத்தப் பள்ளி சேர்ப்பு விகிதம் ஆரம்ப வகுப்பில் 95.1 விழுக்காடு ஆக இருப்பது 2017 கணக்கீட்டின்படி 9, 10 வகுப்புகளில் 79.3 விழுக்காடு ஆகக் குறைந்து 11, 12 வகுப்புகளில் வெறும் 51விழுக்காடாகி விடுகிறது. கல்விக் குழு அறிக்கையின்படி இன்றும் (பக்கம் 65) 6.5 கோடிக் குழந்தைகள் பள்ளி செல்வது இல்லை. மேற்கண்ட (மிரட்டல்) தேர்வுகள் மேலும் குழந்தைகளை வடிகட்டினால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களை மட்டுமே உயர் நிலைக் கல்வி நோக்கிச் செல்லவைக்கும் அபாயம் உள்ளதே. இது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது இல்லையா?’ எனும் தமிழ்நாடு உளவியல் நிபுணர்கள் சங்கத்தின் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது. அரசு இதைக்கவனித்து இந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

அரசு ஆணை வந்துவிட்டது! 5, 8ஆம் வகுப்பு தமிழ்நாட்டு மாணவர்கள் அரசுப் பொதுத்தேர்வு எழுதத் தயாராக வேண்டுமாம்! தமிழ்நாடு அரசுத் தேர்வுகள்இயக்குநரின் (ந.க.எண்-077171/எச்-1/2019 நாள்-28.11.2019) அனைத்துப் பள்ளிகள் மற்றும் ஊடகங்களுக்கு வந்துவிட்டது. “ஏற்கெனவே வாய் கோண லாம், இதுல கொட்டாவி வேறயா” எனும் பழமொழிதான் எனது நினைவிற்கு வருகிறது! இந்தக் கொடுமை உலகில் எங்காவது உண்டா? “பரிட்சை வச்சாத்தானே பசங்க படிக்கிறாய்ங்கெ” என்பது பொதுவான மற்றும் பிழையான கருத்து. இது நமது கல்விமுறையைக் குழப்பியவர்களின் அரிய கண்டுபிடிப்பு! இன்னொரு பக்கம், “தேர்வு அச்சம்” (எக்சாம் ஃபீவர்) என்னும் பொதுக் கருத்தும் உண்டு. எனில் இரண்டுக்கும் காரணம் இருக் கிறதல்லவா? இதுபற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்.

உலகில் முன்னேறிய நாடுகளின் பள்ளிக்கூடங்களில் தேர்வோ, வெற்றி-தோல்வியோ இல்லை! எனவே தேர்வு அச்சமே இல்லாமல்தான் குழந்தைகளை, அவர்தம் படைப் பாக்கத்தை, உலகியல் அறிவைத் தூண்டிவிடும் வேலையை மட்டும் அந்த அரசுகள் செய்கின்றன!   அதனாலேயே அந்நாட்டுக் குழந்தைகள் அச்சமின்றிப் படிப்பது மட்டுமல்லாமல் தமக்கு ஆர்வமான துறைகளில் உழைப்பைச் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். அவர்தம் நாடும் முன்னேறுகிறது! மேற்படிப்பில் அவர்கள் எந்தத் துறையில் ஆர்வம் காட்டுகிறார்களோ, அந்தத் துறையில் அவர்கள் பயணிக்க, நாம் வழிகாட்டும் வேலையை மட்டும் பார்த்தால் போதும். ஆசிரியர்கள் வழிகாட்டிகள் தானே? குச்சியை எடுத்துக் கொண்டு ஆடுகளின் கூடவே திரியும் மேய்ப்பர்களல்லவே?

குருவி தலையிலே பனங்காயா?

“ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தும்போதுதான் மாணவர்கள் மத்தியில் படித்தாக வேண்டும் என்கிற கட்டாயமும், பொறுப்புணர்வும் வரும் என்ப தும், அப்போதுதான் ஆசிரியர்களும் தேர்ச்சி விகிதத்தை உறு திப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுவர் என்பதும், தனது முடிவுக்கு பள்ளிக் கல்வித்துறை முன்மொழி யும் காரணங்கள். ஆசிரியர்களைத் தூண்டுவதற்காக, பிஞ்சு களைப் பொதுத் தேர்வுக்கு ஆட்படுத்த முற்படுவது, மனிதாபி மானமற்ற செயல்”  என்கிறார் மூத்த கல்வியாளர் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி.   தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசுதவி பெறும் துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் இதுவரை தேர்வுகள் நடத்தப்பட்டுத் தான் வருகின்றன. ஆனால், மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் எனும் பொதுத்தேர்வு இப்போது திணிக்கப்பட உள்ளது. இதுதான் மிகப்பெரும் சமூகப் பின்னடைவிற்கு இட்டுச் செல்லப்போகிறது! இது மாணவர் மனச்சிக்கலை ஏற்படுத்தி, பள்ளியிலிருந்து விலகும் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடும் என அச்சம் எழுகிறது.

இதற்குக் காரணம் உண்டு! கடந்த சில ஆண்டுகளில் 10, 11, 12 வகுப்புகள் மூன்றிற்கும் அடுத்தடுத்து அரசுப் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், 11ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமலே 12ஆம் வகுப்புப் பாடங்க ளையே இரண்டு வருடம் நடத்துகிறார்கள் என்பதால், இந்த மாணவர்கள் மேற்கல்வியில் தடுமாறுகிறார்கள் என்பதைத் தவிர்க்கவே. ஆனால், நோக்கம் நல்லதே எனினும் நடை முறை தவறாகிவிட்டது. என்ன ஆனது தெரியுமோ? 11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வைத்த இரண்டே ஆண்டுகளில் நம் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுமார் ஒருலட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் படிப்பு அவ்வளவுதான்! த.உதயசந்திரன் , நல்ல நோக்கத்து டனே இதனைச் செய்யப் போக, நிலைமை தவறாகிவிட்டது கண்டு கல்வியாளர்களின் இதுதொடர்பான கவலை மேலும் தொடர்கிறது!

இதுபோலும் தேர்வு அச்சம் மட்டுமல்ல, தேர்வுகளால் ஏற்படும் மாணவர் பாதிப்பு ஒருபுறமிருக்க, பள்ளித் தேர்வு தோல்விகளின் சமூகவிளைவுதான் முக்கியமாக கவனிக் கப்பட வேண்டும். இதுபற்றி அரசு கவலைப்படுகிறதா? ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வியடைந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கு கிறது. வேறென்ன? அந்தப் பிஞ்சு வயதில் வீட்டு வேலைகளை, அல்லது தாய்தந்தை பார்க்கும் கூலி வேலைகளைப் பார்க்கப் போகும் நிலை ஏற்படும். அதுவும் எட்டாம் வகுப்பில் தோல்விய டையும் பெண்குழந்தைகள் இரண்டு வகை ஆபத்துகளை  நம் நாட்டில் எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது! “வயதுக்கு வந்த பொம்பளப் புள்ளைய எப்புடி வெளிய அனுப்புறது?” எனும் அப்பாவித்தனமான கேள்விக்கு அந்தப் பிள்ளை தோல்வி துணையாக வந்து படிப்பை நிறுத்திவிடும் ஆபத்து எத்தனை பேருக்குப் புரிகிறது?

“அதுதான் ஃபெயிலாப் போயிருச்சே! வயசு 12தான் ஆவு துன்னு பாக்கேன், ஒன்னு ரெண்டு வருசத்துல ஒருத்தன் கையில புடிச்சுக் குடுத்து, ஒன் பொழப்பப் பாத்துக்கன்னு அனுப்பி வைக்க வேண்டியதுதான்!” எனும் நமது கிராமத்து கேடுகெட்ட சமூக எதார்த்தம் இன்றும் உள்ளதா? இல்லையா? இதை மாற்றி, பெண்பிள்ளைகள் எட்டாம் வகுப்பைத் தாண்டி பத்தாம் வகுப்பு வந்தால்தான் அரசுதரும் கல்வி உதவித் தொகை கிடைக்கும், அது அவர்களின் திருமணத்திற்கு உதவும் என்னும் நோக்கத்துடன் தானே “மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் திருமண உதவித்திட்டம்” பட்டதாரி ஏழைப் பெண்பிள்ளைகளுக்கு ரூ.50,000 தமிழகத்தில் திமுக அரசால் 1989முதல் வழங்கப்பட்டு இன்னும் நடைமுறையில்உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் (வெற்றி பெறத் தேவையில்லை), ரூ.25,000 உடன், 4சவரன் தங்கமும் வழங்கப்படுகிறது. “இதற்காகவாவது நமது கிராமத்து, ஏழைப் பெண் பிள்ளைகள் பத்தாம் வகுப்புவரை படிக்கட்டும்” எனும் சமூகநீதி உணர்வு எங்கே? அவர்களைத் தோல்வி எனும் பெயரில் பள்ளியை விட்டு விரட்டி, பண்ணைகளிலோ, நகரப் பெரு முதலாளிகளின் பெரிய கடைகளிலோ அடிமை வேலை செய்யட்டும் என விரட்டும் இன்றைய மத்திய மாநில அரசுகள் எங்கே?

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப் பட்டால், அது, நமது உள்நாட்டு வெளிநாட்டு ஆண்டைக ளுக்கு, படிக்காத அடிமைகளை அனுப்பத்தான் உதவும்! இதுதான் நமது நாட்டு முன்னேற்றத்திற்காக திட்டமா? அல்லது காவி+கார்ப்பரேட்டுகளின் ஆதரவுக் கொட்டமா? உலகில் எந்த நாட்டிலும் இப்படி பள்ளி மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் மாநிலஅளவில் அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படுவதில்லை என்பதை மிக முக்கிய மாகக் கவனிக்க வேண்டும்.

உலக நாடுகளில்  பள்ளிப் பருவத் தேர்வுகள்

இன்றைய மத்திய, மாநில அரசுகள் 3, 5, 8, 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் அனைத்திலும் அரசுப் பொதுத் தேர்வு களை நடத்துவது, “குழந்தைகளின் மீது நடத்தப்படும் வன்முறை” என்கிறார்கள் உளவியலாளர்! இதனால்தான் உலகின் முன்னேறிய நாடுகளில்  இந்த வன்முறை தவிர்க்கப்பட்டுள்ளது. பின்வரும் இணையத்தில் பாருங்கள். பின்லாந்து, பிரான்சு, ஜப்பான், கொரியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகள், தமது பள்ளி மாண வர்க்கு 15வயதிற்கு முன் அரசுத் தேர்வே கிடையாது  என்பதை நடைமுறைப்படுத்தி வருகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

-https://www.localschoolsnetwork.org.uk/faq/what-are-examination-systems-other-countries

ஆனால், நம் நாட்டில்? இன்னும் பற்பலகோடிப் பிள்ளை களின் கல்விக் கனவைப் பொசுக்க வரும் இந்த 5,8ஆம் வகுப்புக்கு அரசுத் தேர்வு என்னும் கொடுமையை அனுமதிக்கப் போகிறோமா? சட்ட ரீதியாக மட்டுமின்றி சமூகரீதியாகவும் எதிர்த்து களம்காணப் போகிறோமா?  கல்வியாளர் மட்டுமல்ல, அரசியலாளர், சமூக ஆர்வலர், ஆசிரியர், அரசு ஊழியர் என அனைவர் முன் நிற்கும் அவசரக் கேள்வியிது. வேறு வழியில்லை! போராடித்தான் இந்த  ஆட்சியைத் திருத்த முடியும்!

எல்லாக் குழந்தைகளும் பள்ளிக் கூடம் போகணும்,
பத்தாண்டுக் கல்வியினை நிச்சயம் படிச்சு ஆகணும்
ஓட்டலிலே மேசை துடைக்கும் சின்ன அரும்பைப் பாரு! நீ
கொஞ்சுகிற பிஞ்சுமுகம் போலில்லையா கூறு!
முல்லை அரும்பாகி முழுப்பூவாய் மாறும் முன்னே
தொல்லை துரத்துதம்மா வளர்பிறையே தேயுதம்மா”

 

பேரா.ரவிச்சந்திரன் எழுதிய அறிவொளிப்பாடல்
 

கட்டுரையாளர்: “முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், 
அரசுப் பள்ளி   தமிழாசிரியர் (ஓய்வு) 
தொடர்பிற்கு : muthunilavanpdk@gmail.com


 

;