இந்திய அணியின் ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளதை அடுத்து மயாங் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சார்பாக 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் அடங்குவர். ஏற்கனவே ஷிகர் தவான், காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, புவனேஷ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பதிலாக விஜய் சங்கர் சில போட்டிகளில் விளையாடினார்.
இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எதிரான போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்ட போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து, விஜய் சங்கரின் கணுக்காலில் பட்டு காயம் ஏற்பட்டது. காயம் குணமடையாததால், உலகக்கோப்பை தொடரில் இருந்து விஜய் சங்கர் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், விஜய் சங்கருக்கு பதிலாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.