உத்தரபிரதேசத்தில் மகள் கண்முன்னே பத்திரிகையாளர் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள விஜய் நகர் சாலையில் விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் இரண்டு குழுந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த கும்பல் விக்ரமைத் தாக்கி வாகனத்தில் இருந்து கீழே தள்ளியது. எதிர்பாராத விதமாக நடந்த தாக்குதலில் அதிர்ச்சியடைந்த குழுந்தைகள் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து பத்திரிகையாளரை சரமாரியாக தாக்கி கும்பல் அவரை காரில் சாய்த்து மீண்டும் கடுமையாக தாக்கியது. கும்பலில் இருந்த ஒருவர் திடீரென விக்ரம் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் மயக்கம் அடைந்த அவர் சாலையில் விழுந்தார். அந்த கும்பல் சென்ற உடன் அருகில் வந்த மூத்தமகள் கதறி அழுதார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த விக்ரம் இன்று உயிரிழந்தார். விக்ரம் மீதான துப்பாக்கி சூட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காசியாபாத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 10 பேரை கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.