உத்தரபிரதேசத்தில் 2.39 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வை தவிர்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் செவ்வாயன்று பொதுத் தேர்வு துவங்கியது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுத 56 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் இடைநிலை மற்றும் உயர்நிலை தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 2,39,133 மாணவர்கள் முதல் நாள் தேர்வு எழுத வர வில்லை என்று உத்தரபிரதேச மத்யாமிக் சிக்ஷா பரிஷத் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொது தேர்வு தொடங்கிய முதல் நாளில் நடந்த இந்தி தேர்வை உயர்நிலை பள்ளியில் பயின்ற 157042 பேரும், இடைநிலை கல்வி பயின்ற 82091 பேரும் எழுதாமல் தவிர்த்துள்ளனர்.
தேர்வில் காப்பி அடிக்க முயன்ற 34 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் நகலெடுக்கும் தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 ஆய்வாளர்கள் மற்றும் ஒருவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச தேர்வு வாரிய செயலாளர் நீனா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில் பல மாவட்டகளில் இருந்து இன்னும் அறிக்கை வரவில்லை என்பதால் தேர்வை தவிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.