தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, மே 15 - தில்லி, சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருக்கு எதிராக, தில்லிக் காவல்துறையினர் வலுக்கட்டாய நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சபருல் இஸ்லாம் கான் (72) அவர்களுக்கு எதிராக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த ஒரு செய்தியின் அடிப்படையில், தில்லிக் காவல்துறை தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது.
இதனை அடுத்து சபருல் இஸ்லாம் கான் சார்பாக முன்ஜாமீன் மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், சபருல் இஸ்லாம் கான் ஒரு இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளி என்றும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் இன்றையநிலையில் 72 வயதுள்ள அவரைக் கைதுசெய்தால் அவருக்கு மோசமான விதத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் எனவே அவரைப் முன் பிணையில் விடவேண்டும் என்றும் அவருக்கு சார்பாக ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும் தன் மீது இ.த.ச. 124-ஏ(தேசத் துரோகம்), 153-ஏ (சமூகத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது, தவறானது, பிழையானது மற்றும் சட்டத்தின்கீழ் நிலைக்கக்கூடியதல்ல என்றும் சபருல் இஸ்லாம் கான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சபருல் இஸ்லாம் கான் சார்பில், அவர் பதிவேற்றம் செய்த செய்தி, சிறுபான்மை மக்களின் அவலநிலையைக் குறிக்கிறது என்றும், சமூகத்தில் ஒருசில சக்திகள் அவர்களுக்கு எதிராகக் குறிவைத்திருக்கின்றனர் என்றும் மேலும் இந்திய முஸ்லீம்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் சகோதரத்துவம் அதிகரித்திருக்கிறது என்றும் இவ்வாறு குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. அதன் பின்னர், தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருக்கு எதிராக காவல்துறையினர் வலுக்கட்டாய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
(ந.நி.)