அதிமுக அதிருப்த்தி எம்எல்ஏக்களுககு சபாநயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அதிமுக அரசை தக்க வைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவின் பலம் 113 ஆக உள்ளது. இதில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான, கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் அதிமுகவிற்கு எதிராக களம் இறக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.
இதேபோல் சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர்கள் 88 பேருடன் காங்கிரசில் 8 பேரும், முஸ்லீம் லீக் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக உள்ளதால் திமுக கூட்டணியின் பலம் 97 ஆக உள்ளது. இந்நிலையில், காலியாக உள்ள 22 தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதேபோல், மீதமுள்ள 4 தொகுதிக்கும் வரும் மே.19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
குறிப்பாக 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் பட்சத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனை முன்கூட்டி உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, முன்னெச்சரிக்கையாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை குறைத்தால் மீண்டும் ஆட்சியை சிறிது காலம் தொடரலாம் என அதிமுக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களான, அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் கடந்த மே 3ம் தேதி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியிருந்தார்.
இந்நிலையில் அறந்தாங்கி ரத்தினசபாபதி மற்றும் விருத்தாசலம் கலைச்செல்வன் இருவரும் உச்சநீதிமன்றத்தில் சபாநயகரின் நோட்டீஸ்க்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் , சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக திமுக மனு அளித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தில் உள்ள எம்எல்ஏகள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே சபாநாயகர் நடவடிக்கைகைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் கபில் சிபில் மற்றும் சபாநாயகர் தனபால் சார்பில் முகுல் ரோத்தகி ஆஜரானார்கள். சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேருக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளோம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று வாதங்களை முன்வைத்தனர்.
அதை தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் கபில் சிபில், மக்களவைத் தேர்தல் தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில், சாபநாயகரின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அது நிலுவையில் உள்ளது. இதனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று வாதித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த நடவடிக்கை குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் அளிகக் வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.