புதுதில்லி, செப்.13- சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இடமாற்றம் தொடர்பான கொலிஜியத்தின் பரிந்துரை குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்து க்கு மாற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. 75 நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை, மூன்று நீதிபதிகளை மட்டுமே கொண்ட நீதி மன்றத்துக்கு மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஹில் ரமணி தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், பல மாநில பார் கவுன்சில்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், கொலிஜியத்தின் முடிவை மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் நீதிபதி தஹில் ரமணிக்கு அறிவுரை செய்துள்ளது. இந்த நிலையில் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் (செப்டம்பர் 12) வெளியிட்ட அறிக்கை யில், “உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி களை இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இடமாற்றத்துக்கான கொலிஜியத்தின் அனைத்து பரிந்துரைகளும் தகுந்த காரணங்களுடனும் தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டும் மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “நீதித் துறையில் சிறந்த நிர்வாகத்தை அளிப்பதற்காகவே இடமாற்றங்கள் நடைபெறுகின்றன. இடமாற்றத்துக்கான காரணங்களை வெளியிடுவது நீதித் துறையின் நலனுக்கு உகந்தது அல்ல என்றாலும்கூட, தேவைப் படும்பட்சத்தில் அதை வெளியிடுவதில் கொலிஜியத்துக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.