கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடக் கூடாது என போலீசார் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று ஊரடங்கு உத்தரவை மீறி திருச்செந்தூர் பிச்சிவிளை மெயின் ரோட்டில் டீக்கடைகளை திறந்து வியாபாரம் செய்ததாக பிச்சிவிளை ராஜாமணி நகரைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயசீலன் (48) என்பவரை திருச்செந்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்தோனி சுரேஷ் லிங்கம், வழக்குப் பதிந்து கைது செய்தார்.
இது போல் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறி கடை திறந்ததாக பிச்சிவிளை மேற்கு தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் பிரகாஷ் (34), மணியாட்சி மேற்கு தெருவைச் சேர்ந்த பொன்னையா மகன் பிரம்மு (35) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் நடமாடியதாக எப்போதும் வென்றான் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்து முருகன் (30), புதுக்கோட்டை கலாம் நகரைச் சேர்ந்த ஞானராஜ் (59), புதுக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (27) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.