நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கொரோனா அச்சத்தால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்ற விமர்சித்திருந்தார். இதையடுத்து சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஹரிபரந்தாமன் உள்ளிட்ட 6 நீதிபதிகள் தலைமை நீதிபதி ஏ.பி சாஹிக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி தலைமையிலான அமர்வு நிராகரித்தது. மேலும் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது.