மதுரை, மார்ச் 13- கொசுக்களை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் கொசுக்களால் பரவி வரும் நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்புப் பணிக்கு நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கொசுக்களை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்க ளைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கொசு ஒழிப்பு மையத்தில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை வெள்ளியன்று விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை வழங்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.