மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை கடந்த அக்டோபர் 4ம் தேதி மும்பை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து அன்று இரவே மரங்களை வெட்டும் பணியில் மெட்ரோ நிர்வாகம் இறங்கியது. அப்பகுதியில் திரண்ட சமூக ஆர்வலர்கள் மரங்களை வெட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அக்டோபர் 4ம் தேதி ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்ட மெட்ரோ நிர்வாகத்திற்கு தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரோ நிலையத்துக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை. ஆனால் அப்பகுதியில் இதுவரை வெட்டப்பட்ட மரங்கள், அதற்கு பதிலாக புதிதாக நடப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என இரண்டு நீதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.