கோபி, ஜூன் 6-கோபி அருகே 90 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய கிணற்றில் இறங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட சில்லாமடை கிராமத்தில் அமராவதி (35) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குமிங்கும் சுற்றித் திரிந்து வந்தார். இந்நிலையில் 90 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய கிணற்றில் இறங்கி அமர்ந்துள்ளார். அவர் மேலே ஏறி வருவதற்குப் படிகள் இல்லாததால் கிணற்றிலேயே அமர்ந்துள்ளார். அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த அமராவதியை கயிறு மூலம் உயிருடன் மீட்டனர். போக்குவரத்து மிகுந்த சாலையின் அருகில் உள்ளகிணற்றில் இறங்குவதற்குப் படிகள் இல்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எப்படி இறங்கினார் என்று அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டபெண்மணி 90 அடி ஆழக்கிண்றில் இறங்கி அமர்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சில்லாமடை ஆரம்பப்பள்ளி கிணற்றின் அருகில் உள்ளதால் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது வகையில் கிணற்றைக் கம்பி கிரில்கள் வைத்து மூட வேண்டும். பள்ளியின் அருகில் சாலையில் வேகத்தடை இல்லாததினால் வாகனங்கள் அதிவேகமாகச் சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, பள்ளியின் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.