சத்தியமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து விவசாய கூலி தொழிலாளி பலி
ஈரோடு, ஜூன் 13- சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். கோவையிலிருந்து அட்டை பாரம் ஏற்றிய லாரி பவானி சாகர் பகுதியில் உள்ள காகித ஆலைக்குச் செல்வதற்காக புஞ்சைபுளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரி கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வளைவில் திரும்பியபோது அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மளிகை கடை முன்பு கவிழ்ந்தது. அப்போது கணக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (68) என்பவர் மளிகை கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு கடை முன்பு நிறுத்திய தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது லாரி பழனிசாமி மீது விழுந்ததில் லாரியின் அடியில் பழனிசாமி சிக்கிக்கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து லாரியை நகர்த்தி பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் வழியிலேயே பழனிசாமி இறந்து விட்டார். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு பயிற்சி
ஈரோடு, ஜூன் 13- ஈரோட்டில் எல்கேஜி, யுகேஜி மாணவ-மாணவிகளுக்கு எளிமையாகப் பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளிகளோடு இயங்கும் அங்கன்வாடி மையங்கள் இணைக்கப்பட்டு 89 பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாள் பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியினை மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் 89 ஆசிரியை-ஆசிரியர்களுக்கு வழங்கி னர். இதில், சிறுவர்களை உளவியல் ரீதியாகக் கையாளு தல், கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களைக் கண்டறிந்து கற்றலை மேம்படுத்துதல், மாணவர்களுக்குப் பாடல்கள் மூலம் கற்பித்தல், ஓவியங்கள், வரைபடங்கள் மூலம் பாடம் கற்பிக்கும் முறை குறித்துப் பயிற்சி அளிக்கப் பட்டது. செவ்வாயன்று தொடங்கிய பயிற்சி கூட்டம் வியாழனன்று நிறைவடைந்தது.