tamilnadu

img

ஈரோடு இடைத்தேர்தல்: திமுக வெற்றி! டெபாசிட் இழந்த நாதக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டெபாசிட்டை உறுதி செய்ய 25,777 வாக்குகள் தேவை என்ற நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிச 14-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிட்டனர். அதிமுக, பாஜக, தேமுதிக,பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை முதல்வருக்கு சமர்பிப்பதாக கூறி, வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.