tamilnadu

img

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.  

சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் எந்த நேரத்திலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் தகவல்களும் கூறப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில்,  ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ’RQ-4 Global Hawk’ என்ற ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, ஈரானிய வான்வெளியில் எந்த அமெரிக்க விமானங்களும் இயங்கவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் கூற்றுகளை மறுத்துள்ள அமெரிக்கா, சர்வதேச வான்வெளியில் பறந்துக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான MQ-4C என்ற ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் தாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.