ஈரான் மீது உள்ள பொருளாதார தடையை நீக்கும் வரை அமெரிக்கா உடன் பேச்சு வார்த்தை இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் காரணமாக அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், அந்நாட்டை அச்சுறுத்தும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை அமெரிக்கா குவித்து இருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று, “ஈரானுடன் அமர்ந்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்நாட்டுடன் எந்த வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவையானவற்றை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாம்பியோ தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஸரீப், ”ஈரானுக்கு எதிராகவும், அப்பாவி மக்களுக்கும் எதிராகவும் அமெரிக்கா பொருளாதாரத் தீவிரவாதத்தை கையாளுகிறது. ஈரான் மீதான பொருளாதார தடை என்பது டிரம்பின் பொருளாதாரப் போர். இந்நிலையில் போரும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.