பழனி, மார்ச் 13- மத்திய அரசு மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கு “நீட்” தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இதன் பின்னணியில் பல்லாயிரம் கோடி ரூபாய் வணிகம் நடைபெறுகிறது. பயிற்சி மையங்களின் கட்டணத்தை குறைக்க வேண்டு மென பழனி ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்:- பல தனியார் “நீட்” தேர்வு பயிற்சி மையங்கள் பெற்றோர்களின் மனதைக் கரைத்து குடும்பங்களை மொட்டையடித்து வருகின்றன. பல பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆறாம் வகுப்பு முதலே கருணையின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை வசூலிக்கின்றன. “நீட்” தேர்வு பயிற்சி மையங்களின் அதிபயங்கர கட்டணத்தால் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகி வருகிறது. இம் மையங்களின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அரசு கண் காணிக்க வேண்டும். இதற்கென அரசு சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.