tamilnadu

img

இயற்கை உணவு உணர்வை விதைக்கும் ஆசிரியை

வாழ்க்கையை ஆரோக்கி யமா வாழ நாம இன்னைக்கு எவற்றையெல்லாம் பின்பற்றுகிறோம்? ஆனா, எல்லாமே சரியாவதற்கு ஒரே வழி உணவு மட்டும்தான். “ஆரோக்கியமான உணவேதான் நிரந்தரமான சந்தோஷத்தைக் கொடுக்கும்" என்று சொல்கிறார் ஆசிரியை புஷ்பலதா என்ன, ஆசிரியர் சமையல் பற்றி பேசுகிறாரே என்று யோசிக்கிறீர்களா? அதை அவரே விளக்குகிறார். ``சாதாரண விவசாய குடும்பத்தில்தான் பிறந்தேன். படிப்பு மட்டும்தான் வாழ்க்கையில முன்னேற ஒரே வழி. குடும்பச் சூழல் ரொம்பவே இக்கட்டான நிலை. அப்படியிருந்தும் இளங்கலை தமிழ் படிச்சேன். அப்புறம், எனக்கு எப்பவும் ஒரு எண்ணம் உண்டு. நம்ம நினைக்குற கருத்துகள் அடுத்த தலைமுறைக்கு போகணும் என்றால், அதற்கு சிறந்த இடம் ஆசிரியர் பணிதான். நான் விரும்பிய ஆசிரியர் பணியும் கிடைச்சுது. 

திருமணத்துக்கு அப்புறம்தான் பெண்ணுக்கு இன்னொரு வாழ்க்கை தொடங்குதுன்னு சொல்லுவாங்க. என் வாழ்க்கையில அதான் உண்மையும்கூட. என் கணவர் ராஜா, நான் என்ன செஞ்சாலும் எனக்கு உறுதுணையா இருப்பார். அவரே என் செயல்களுக்கான உந்துதலைத் தருகிறார். அவரும் ஆசிரியர். வித்தியாசமா, ஆரோக்கியமா, புதுமையா... இரண்டு பேருமே கும்பகோணம், அருகே உள்ள திருமலைராஜபுரம், கிராமத்தில் அரசினர் ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியுறோம். கும்பகோணத்தில் உள்ள சிறந்த அரசுப் பள்ளிகளின் பட்டியலில் எங்கள் பள்ளியும் உண்டு. என் கணவருக்காக வித்தியாசமா சமையல் செய்யணும், அது ஆரோக்கியமாகவும் இருக்கணும்னு நினைச்சேன். அப்படி வந்ததுதான் சமையல் ஆர்வம்.  ஒரு பொருளை கொண்டு பத்து விதமான உணவுகளைச் சமைத்திருக்கிறேன். சமைக்கப் பயன்படுத்தும் பொருள்கள் எல்லாமே இயற்கையானதா இருக்கணும்னு, வீட்டுக்கு முன்புறமும் மாடியிலும் காய்கறி தோட்டம் போட்டோம். அப்போதான் எனக்கு ஒரு யோசனை. நம்ம பள்ளி மாணவர்களுக்கு இதைச் சொல்லிக்கொடுக்கலாமே என்று. அதனால, என் பள்ளி மாணவர்களுக்கு நானே விதைகளை வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

கொடுத்தா மட்டும் போதுமா? அதை அவங்க சரியா பயன்படுத்தணும்னு ஆசைப்பட்டேன். யார் சரியான முறையில் தோட்டம் போட்டு பராமரிச்சிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு ஒரு பரிசு தர்றேனு சொன்னேன். இது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்துச்சு. போட்டி, பரிசு என்றாலே ஆர்வம் வந்துடும் இல்லையா? அப்படித்தான் ரொம்ப ஆர்வமா செய்ய ஆரம்பிச்சாங்க.  மாசா மாசம் அவங்க வீடுகளுக்கு நானே போய் பார்த்துவிட்டு  வருவேன். யார் ரொம்ப நல்லா பராமரிச்சிருக்காங்களோ, அவங்களுக்குப் பரிசு கொடுப்பேன். இதைச் செய்ய ஆரம்பிச்சப்ப, பலரும் கேலி செஞ்சாங்க. ஆனா, நான் அதைப் பொருட்படுத்தவே இல்ல. இந்த ஆண்டோட பத்து வருஷம் ஆகுது. தொடர்ந்து செய்யணும். இன்னும் புதுமையா பண்ணவேண்டும்னு ஆசை.

விரும்பிச் சாப்பிடும் வகையில்...

உணவு பழக்கவழக்கம்தான் என்னுடைய வகுப்பில் பிரதான பாடம். இன்றைக்கு மாணவர்களோட பெற்றோர்களும் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிருப்பது மகிழ்ச்சியா இருக்கு. சாதாரணமா சமையல் ருசியா இருந்தா போதும் நம்ம தலைமுறை விரும்பிச் சாப்பிடும். ஆனா, அந்தக் கால உணவுல ரொம்ப ஆரோக்கியம் இருந்த அளவுக்கு இப்போ இல்ல. அந்த உணவுப் பொருள்கள் எப்படி இந்தத் தலைமுறைக்கு கொடுத்தா சாப்டுவாங்களோ... அதே பாணியில் சமைக்க ஆரம்பிச்சேன். அதை வீடியோவாக்கி சமூக வலைதளம் மூலம் உலகத்துக்கும் தெரியப்படுத்தினேன். இதை பள்ளிக்கல்வித்துறை ஊக்கப்படுத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு நோயில்லாத, அவர்கள் பயிரிட்ட உணவு பொருட்களை உண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு கல்வியோடு உணவு பழக்க வழக்கத்தையும் கற்றுத் தரலாம் என சாதாரண மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தமிழக அரசுக்கு என் கோரிக்கையை தெரிவித்து விரிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னுடைய உணவு முறையில் நாம சாதாரணமா பார்த்துட்டு கடந்துபோற பொருள்கள்தான் அதிகம் இருக்கும். காட்டுச்செடிதான் ஆவாரம்பூ. ஆனா, அதை வெச்சி சாம்பார் பொடி செய்வேன். தும்பைப்பூ பொடி, வேப்பம்பூ ரசம். இப்படிச் சொல்லிட்டே போகலாம். நமக்கு ஆரோக்கியம் தரும் எல்லாமே நம்மைச் சுத்தித்தான் இருக்கு. நாமதான் அதையெல்லாம் விட்டுட்டு நவீன முறைனு சொல்லிட்டு, ஃபாஸ்ட் புட்டைத் தேடுறோம். உடலையும் கெடுத்தும் வெச்சிருக்கோம். அதைச் சரிபடுத்த என்னால முடிந்த முயற்சிதான் இந்த ஆரோக்கிய சமையல். இதுவும் பாடம் நடத்துகிற  மாதிரிதானே?" என்று சொல்லிவிட்டு அழகாகச் சிரிக்கிறார் ஆசிரியை புஷ்பலதா.  உணவு பழக்கவழக்கம்தான் என்னுடைய வகுப்பில் பிரதான பாடம். இன்றைக்கு மாணவர்களோட பெற்றோர்களும் இதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிருப்பது மகிழ்ச்சியா இருக்கு என்கிறார் அவர். 

தொகுப்பு: குடந்தை சரவணன்