சென்னை, மார்ச் 23- தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (மார்ச்23) 2019-20 ஆண்டிற்கான தமிழக அரசின் இறுதித் துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, ‘2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி இரண்டாவது துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ‘புதுப் பணிகள்’ மற்றும் ‘புது துணைப் பணிகள்’ குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்ற பேரவையின் ஒப்புதலை பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடு செய்வதும் இந்த துணை மானியக் கோரிக்கையின் முக்கிய நோக்கம்’ என்றார். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்வதற்கும், உபகரணங்களை நிறுவுவதற்கு ரூ.231 கோடியும், இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.161 கோடியும், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூ.123 கோடியும் அரசு அனுமதித்துள்ள தொகை பள்ளிக் கல்வியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கொரோனா...
வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சேதமடைந்த அரசுக் கட்டடங்களை பழுதுபார்த்து சீரமைக்க 196 கோடியை அரசு கூடுதலாக அனுமதித்திருக்கிறது. கடலோரப் பேரிடர் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ், நெகிழ்திறன் சூறாவளி மின் வலையமைப்புகளை நிறுவுவதற்காக ரூ.113 கோடியும் ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
தேசிய ஆயுஷ் குழுமம், தேசிய ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார இயக்ககங்கள் போன்ற மத்திய அரசின் உதவி பெறும் பல்வேறு திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகையுடன் சேர்த்து ரூ. 579.32 கோடி கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ. 300 கோடி மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறையின் மானியக் கோரிக்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் மறு நிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும் எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார். பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள் முதல் செய்வதற்காக அரசு ரூ.166.94 கோடி அனுமதித்துள்ளது. இதற்காக, துணை மதிப்பீடுகளில் 153.28 கோடியை அரசு ஒதுக்கியிருக்கிறது. ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காகவும் இதர மாவட்ட நிர்வாகச் செலவினங்களுக்காகவும் அரசு ரூ.253 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் மொத்த துணை மதிப்பீட்டில் ரூ.5,732 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.677 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.